ஒருவனை உயர்த்த அவன் என்ற பொருளில் ஆளப்படும், இச்சூத்திரத்திற் கூறப்பட்டது ஒருமையையுணர்த்தும் பெயர் மேலும் ஓர் பன்மை விகுதியைப் பெறுவது பற்றியதாம். வேறுபாடு அறிந்து கொள்க. பால. கருத்து : ஆர் என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது. பொருள் : ஆர் என்னும் இடைச்சொல் இயற்பெயர்களின் முன்னர் அவற்றைச் சார்ந்து வந்து பல்லோரறியுஞ் சொல்லுக்குரிய ரகார வீற்றுப் பெயர் போல உயர்தினைப் பன்மை வினையான் முடியும். எ.டு : சாத்தனார் வந்தார் - முடத்தாமக்கண்ணியார் வந்தார் - கொற்றனார் வந்தார் எனவரும். ஆர் என்னும் பாலுணர்த்தும் இறுதி இடைச்சொல்லை நீக்குதற்கு இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி என்றார். பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே என்றதனான் அவை ஒருமையீற்றுப் பெயர்கள் என்பதும் அஃது உயர்த்தற் பொருட்டாய் வருமென்பதும் பெறப்படும். தம்மீறு திரிதலும் என்றதனான் ஆர், ஆரை, எனத் திரிந்து நின்றது. ‘எழுத்தின்’ என்பதனுள் இன் உவம உருபாய் நின்றது. தன்னினம் முடித்தல் என்னும் உத்தியான் தந்தையார் வந்தார் மகனார் வந்தார் எனமுறைப் பெயர்க்கண் வருதலும் கொள்க. அஃறிணை இயற்பெயர் பலர்க்குரியெழுத்தின் முடியாமையின் இயற்பெயர் என்றது உயர்திணை விரவுப் பெயர் என்பது பெறப்படும். இனி நரியார் வந்தார் -யானையார் வந்தார் என அஃறிணைக் கண்ணும் வருமால் எனின் அவை “தம்மரபின வாய்” வந்த “வழக்கினாய உயர்சொற்கிளவி” என்பது கிளவியாக்கத்துட் கூறப்பட்டது. நம்பியார் நங்கையார் என்பனவும் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியாய் அச் சூத்திரத்துள் அடங்குமென்க. அதனான் இச்சூத்திரம் திணைவழுவும் பால் வழுவும் அமைந்ததாகக் கூறுதல் பொருந்தாமையறிக. |