இசரயேல் இக. இங்குக் காணப்படும் இகரம் துணைவினை ஈகாரம் குறுகிய வடிவம் என்பது ஆயத்தக்கது. தொல்காப்பியனார். முன்னிலைத் தன்மை ஆயீ ரிடத்தொடும் மன்னா தாகும் வியங்கோட் கிளவி என்னும் நூற்பாவில் முன்னிலையிலும் தன்மையிலும் வியங்கோட் கிளவி மன்னாது என்று கூறியமையால் சென்றிக, கண்டிக போன்ற முன்னிலைச் சொற்களில் அமையும் வியங்கோள் விகுதி இகரத்துடன் இணைந்து நிற்பதை அசைநிலை அமைப்பாகக் கொண்டனரோ என்பதும், நீட்சி பெற்ற ஈகார உயிர் அமைந்த சென்றீக, வந்தீக போன்ற சொற்களை “முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்” என்னும் நூற்பாவில் அமைகின்றதாகக் கொண்டனரோ என்பதும் கருதத் தக்கன. அங்ஙனமாயினும் ஈகாரத்தோடு இணைந்து வரும் இகரம் எவ்வியல்பிற்று? வியங்கோள் விகுதியன்றோ? இலங்கை மொழியில் ‘நீ சொல்’ என்னும் பொருளில் 1 ’சொல்லிக’ போன்ற வழக்குகள் இன்றும் ஆட்சி பெற்றுள்ளமை கவனித்தற்குரியது. இகும். ‘கண்டிகும்’ என்பதனை, கண்டு+இகும் என்று பகுத்து, ‘இகும்’ என்பதனை இகு+உம் எனப் பிரிக்கலாம். ‘இகும்’ எல்லாவிடங்களிலும் இறந்தகால வினையெச்சத்துடன் இணைக்கப் பட்டுள்ளமை காணத்தக்கது. இகும் முன்னிலையில் வழங்கும் இடங்களிலெல்லாம் அச் சொற்கள் அன்பேவலாகவே ஆட்சி பெற்றுள்ளன. இகு என்பது ஈ (கு) என்னும் துணைவினையின் குறுகிய வடிவமாகக் கொள்ளப்படுதல் பொருத்தமாகத் தோன்றுகின்றது. உம் ஏவற்பன்மை விகுதி காலப்போக்கில் ஒருமையில் வழங்கியதாகக் கொள்ளலாம்.
1. இது ‘சொல்லுக’ என்பதன் திரிபாகலாம் - சிவ. |