சின். முன்னிலையில் ‘சின்’ அசைநிலை பெற்ற பதினான்கு சொற்கள் ஏறத்தாழ நாற்பத்தைந்திடங்களில் (சங்க இலக்கியத்தில்) வழக்கில் காணப்படுகின்றன. இவையாவும் முன்னிலை யொருமை யேவலாகவே ஆட்சி பெற்றுள்ளன. கண்டிசின் (அகம் 94) கண்டு + இசின் பூண்டிசின் (அகம் 7) பூண்டு + இசின் என்றிசின் (அகம் 375) என்று + இசின் கேட்டிசின் (நற் 78) கேட்டு + இசின் நோற்றிசின் (புறம் 202) நோற்று + இசின் வந்திசின் (ஐங் 175) வந்து + இசின் உரைத்திசின் (கலி -63) உரைத்து + இசின் இந்த இடங்களில் எல்லாம் அசைநிலையின் வடிவம் ‘சின் எனக் கொள்ளுவதைவிட ‘இசின்’ என்று பகுப்பதே பொருத்தமாய்த் தோன்றுகிறது. இறந்தகால வினையெச்சங்களுடன் ‘இசின்’ இணைந்துள்ளது என்னலாம். இதனை இசு + இன் எனப் பிரிக்கலாம். ‘இசு’ ‘இகு’ என்பதன் அண்ணவினமான (Palatalized) வடிவம் ஆகும். இகு என்பது ஈ (கு) என்ற துணைவினையின் உயிர் குறுகிய’ வடிவம் ஆகும். எனவே ஈ (கு) - இன் > இ(கு) + இன் > இசு+இன் ஆக மாறி இருக்கலாம். (இடையும் உரியும் பக். 89 - 3). சிவ. ‘சின்’ என்பது ‘இசின்’ என்பதன் திரிபு என்பர் இசரயேல். தொல்காப்பியர் இகும் என்றதுபோல் இசின் என்னாமல் சின் என்றதற்குக் காரணம் யாதாகும் என்பது கருதத்தக்கது. பதிற்றுப்பத்தில் “வரைமருள் புணரி” (11) என்னும் பாடலில் “பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே” என்பதில் ‘கண்டிகும்’ என்பது காணாநின்றேம்’ என நிகழ்காலத்திலும், “நெடுவயின் ஒளிறு” (24) என்னும் பாடலில் “வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே” என்பதில் ‘கண்டிகும்’ என்பது ‘கண்டேம்’ என இறந்த காலத்திலும் வந்தமையால், ‘கண்டிகும்’ என்பது காண் + இகும் எனப் பிரிக்கப்படல் வேண்டுமேயன்றிக் கண்டு + இகும் எனப் பிரிக்கற்படாது. கண்டு எனப் பிரித்தால் அது இறந்த காலச் சொல்லாகிவிடும். ஐங்குறு நூற்றுப் பாடல்களில் வரும் கண்டிகும் என்னும் |