உ-ம் : 1 ‘காரெதிர் கானம் பாடினேமாக’ (புறம். 144). ‘இனைதல் ஆனாளாக’ (புறம். 144), ‘சொல்லற்பாணி நின்றனனாக’ (குறிஞ்சி. 152) எனச்செயவென் எச்சம் முற்றாய்த் திரியும் வழி ‘ஆக’ என்னும் இடைச் சொல்வந்து அவற்றின் பொருளே உணர்த்திச் செயவென் எச்சமாய் நின்றது. இவ் வினையெச்சம் முற்றுவினை முதலைக் கொள்ளும் வழி ‘ஆகல்’ என்னும் இடைச் சொல்லைப் பெற்று நிற்கும். ‘அருளா யாகலோ கொடிதே’ (புறம். 144) ‘தன் பெயராகலின் நாணி’ (புறம். 152) ‘அனையை யாகன் மாறே’ (புறம். 4) என ‘ஆகல்’ என்னும் வினைக் குறிப்புச்சொல் சார்ந்து நின்ற சொற்பொருளையே உணர்த்தி நின்றது. தெரிநிலைக்கும் குறிப்பிற்கும் உரிய இவ்விரண்டு இடைச்சொற்களும் சிறு பான்மைய ஆகலின் வினையியற்கண் எடுத்து ஓதாராயினார். ‘நடுங்குநோய் தீர நின் குறிவாய்த்தாள் என்பதோ. . . துறத்ததை’ (கலி. 127:7), ‘எறிதிரை இமிழ் கானல் எதிர் கொண்டாள் என்பதோ. . . துறந்ததை’ (கலி. 127:9) என்புழி ‘என்பது’ என்றது, ‘என்று சொல்லப்படுவது’ என்னும் பொருள் தந்து நில்லாது, வாய்த்தாள், எதிர்கொண்டாள் என்னும் சொற்கள் உணர்த்திய செய்ந்நன்றியைத் தானும் உணர்த்தி நின்றவாறு காண்க. இவை தாஞ் சார்ந்த சொல்லை அசைத்தே நிற்கும் என்றலின் பிரிவில் அசைநிலை என்றார். இங்ஙனம் நில்லாது வழக்கின்கண் ஆக ஆக என அடுக்கி வந்து உடம்படாமையும் ஆதரம் இன்மையுமாகிய பொருள் தந்து நிற்கும் என்றல் அசைநிலைக்கு ஆகாமையின், அவ்வாறு கூறுதல் பொருளன்மை யுணர்க. ஆதி. ஆக ஆதல் என்பது மூன்றும் தாங்கொண்ட பெயரைப் பிரியாது ஒன்றி நிற்கும் அசைநிலை. அண்ணனாக, தம்பியாக ஒருவரும் உதவினாரல்லர் அண்ணன் தம்பி ஒருவரும் - ‘ஆக’ அசை: ஒட்டி நின்றது. ‘அண்ணன் ஆக! தம்பி ஆக!’ எனப் பிரிந்துநிற்பின், அண்ணனே ஆகுக; தம்பியே ஆகுக’ என ஆகுக என வினையாகும்.
1. பாடினேமாக - பாட, நின்றனனாக - நிற்க |