விடங்களிலும் ஆக - ஆகல் என்பது என்னும் இடைச் சொற்கள் பிரிவில் அசை நிலைகளாம் என்று கொள்வதே சிறக்கும். இதுவே இச்சூத்திரப் பொருளாம் என்க. பால. கருத்து : - பிரிவின்றி வந்து அசை நிலையாகும் இடைச் சொற்கள் இவை என்கின்றது. பொருள் :ஆக ஆகல் என்பது என்னும் அம்மூன்றும், அம்மூன்று சொற்களிடத்தும் இணைந்து வந்து அசைநிலையாகும். என்றது ஒருவன் ஒரு கருத்தைக் கூறுங்கால் பிறனொருவன் அதனை உடன்படுதற் கண்ணும், வற்புறுத்துதற் கண்ணும் கூறுமிடத்து, வியங்கோட் பொருள் படவரும். ஆக, ஆகல், என்னும் சொற்களும், வினைமுற்றுப் பொருள் படவரும், “என்பது” என்னும் சொல்லும் தனித்து வாராமல் இருமுறை அடுக்கி வருங்கால் அவற்றுள் ஒன்று பயனிலையாய் நின்று அடுக்கி வருங்கால் அவற்றுள் ஒன்று பயனிலையாய் நின்று பொருள்தர, ஒன்று அசை நிலையாய் நிற்கும் என்றவாறு. அம்மூன்று சொற்களும் வினைமுற்றாய் நிற்றலின் ஆவயின் என்றும், இரட்டித்த வழி ஒன்றுஇடைச் சொல்லாய் அசைத்து நிற்றலின் அம்மூன்றும் என்றும் விளங்கக் கூறினார் என்க. அகரச்சுட்டு விகாரத்தான் தொக்கது. வரலாறு: ஒருவன் மழைவேண்டி மக்கள் வான் பலிதரல் வேண்டும் என்று கூறியவழி அதனை உடன்படுவான் ஆக ஆக!
1. பொன்-கோதண்டராமன் என்பார் ஆக என்பது ஏழாம் வேற்றுமைப் பொருளில் வரும் ஒரு சொல்லுருபாகக் கொள்ளலாம் என்பர். வளவன் அரசனாக இருக்கிறான்: வளவன் கோபமாக இருக்கிறான், வளவன் அன்பாகப் பழகுகிறான் என்னுமிடங்களில் அரச நிலையில், கோப நிலையில். அன்பு நிலையில் எனப்பொருள் வரலால் ஆக என்பது நிலை என்னும் பொருளில் வந்ததாகக் கொண்டு அதை ஏழாம் வேற்றுமையில் அடக்கலாம் என்பர் அவர். [இலக்கணவுலகில் புதியபார்வை, (பக் 94-100) (1973)] இதுவும் ஓர் கருத்து. ஏற்கக் கூடியதே. இதனால் ஆக என்பது அசை நிலையிடைச் சொல்லாகவும் ஏழாம் வேற்றுமையுருபிடைச் சொல்லாகவும் வரும் என்னலாம். |