ஓ என்ற வழி இசைவையும் இரக்கத்தையும் உணர்த்தும். ஓ ஓ என்பது விலக்குதலை யுணர்த்தும். பிறவும் இவ்வாறு இரட்டித்தும், அள பெடுத்தும், தனிவந்தும் பொருள் வேறுபடுவன வந்த வழிக் கண்டு கொள்க. அஃதேல், ‘ஏவுங்குரையும்’ (இடை. 4) என மேல் ஓத வேண்டிய தென்னை? அதுவும் இதனுள் அடங்குமால் எனின், ஆண்டுப் பொருளுணர்த்தா நிலையைக் கூறினார்: ஈண்டுப் பொருளுணர்த்தும் நிலைமை கூறினார் என்க. நச். இது, பொருள்வேறுபடுமாறு கூறுகின்றது. இ-ள் : ஈரளபு இசைக்கும் இறுதிஇல் உயிரே - இரண்டு மாத்திரையை இசைக்கும் ‘உயிர் ஒள எஞ்சிய இறுதியாகும்’ (மொழி மரபு. 36) என்றதனான் மொழிக்கு ஈறாகாது என்ற ஒளகாரம், ஆயியல் நிலையும் காலத்தானும்- ‘கவவோடியையின் ஒளவுமாகும்’ (மொழி. 37) என்ற இயல்பின் கண்ணே கௌ வௌ என மொழிக்கு ஈறாய் நிற்கும் காலத்துக்கண்ணும் (எவ்வாறு நிற்கும் எனின்) அளபெடை நிலையும் காலத் தானும் அளபெடையின்றித்தான் வரு காலையும் உள என மொழிப் பொருள் வேறுபடுதல் - அவை அளபெடுத்து நிற்கும் காலத்தினும் அளபெடாது நிற்குங் காலத்தினும் பொருள் வேறுபடுதல் உளது என்று கூறுவர் ஆசிரியர்: குறிப்பின் இசை யான் நெறிப்படத் தோன்றும் - அப்பொருள் வேறு பாடு தான் சொல்லுவான் குறிப்பினான் உளதாம் ஓசை வேறு பாட்டான் வழிப்படப் புலப்படும், எ-று. முன்னர் நின்ற உம்மை சிறப்பும்மை: பின்னர் நின்ற இரண்டும் எண்ணும்மை. ஆசிரியர் முன்னர்க் கூறியதனை ஈண்டும் ‘இறுதியில் உயிரே’ என்று ‘ஒருதலை மொழி’ (மரபி. 110) எனும் உத்தியாகக் கூறினமையானும், உரையாசிரியரும் ‘நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி’ (மொழி10) என்புழி ஒளகாரத் தினை உதாரணங் காட்டாது, ‘கவவோ டியையின்’ என்பதனால் கௌ வௌ என உதாரணங் காட்டினமையானும் ஈண்டு, ‘ஆயியல் நிலையும் காலத் தானும், அளபெடையின்றித் தான் வரு காலையும்’ என்னும் இரண்டற்கு ஒளஉ, ஒள என்று உயிரையே உதாரணமாகக் காட்டுதல் ‘மாறு கொளக் கூறல்’ (மரபி. 108) ஆம் என்று உணர்க. |