திரங்கள் எல்லாவற்றையும் ஒருங்கு வைத்து எண்ணியதால் வேறு உரை காண்கிறார். 2. சேனா வரையர் ‘ஒள’ என்பதை மட்டும் கொண்டு அதற்கு இரண்டு பொருள்களை மட்டும் உரித்தாக்குவர். தெய்வச்சிலையாரோ ஆறு உயிர்களை எடுத்துப் பல பொருள்களை உரைக்கிறார். தெய்வச்சிலையாரின் களம் விரிவதோடு, தமிழில் வழங்கும் குறிப்பிடைச் சொற்கள் பற்றிய செய்திகளையும் விளக்குகிறது. பேச்சு வழக்கில் பயன்படும் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இக்குறிப்பிடைச் சொற்கள் பற்றிய தொல்காப்பியச் சிந்தனையையும் இங்கே நாம் அறிய முடிகிறது. ஒளகாரம் மட்டுமே எனக் கொண்டால், மற்ற ஆறும் குறிப்பிடைச் சொற்களாகப் பயன்படுவது பற்றி அறிய முடியாதுபோம். ஒரு நிறைவற்ற பகுதியாக இது நின்றுவிடும். ஏகார ஓகாரங்கள் சொற்களோடு சேர்ந்து தேற்றம், வினா போன்ற பொருட்களைத் தருவதை விளக்குகிற ஆசிரியர் இங்கு அதே ஏகார ஓகாரங்களும் பிறவும் தனித்து நின்றும், வாக்கியத்தின் முதலில் நின்றும் உணர்ச்சிப் பொருள்களை வெளிப்படுத்துந் தன்மையை விளக்குகிறார் எனல் வேண்டும். இதனால்தான் போலும், ஒருசார் இடைச்சொற் பொருளை இச்சூத்திரம் உணர்த்துவதாகத் தெய்வச்சிலையார் குறிக்கிறார். மேலும் சேனாவரையரே இவ் வௌகாரங்கள் இப்போது ஓகாரங்களாக வழங்குகின்றன என்று தம் காலத்திய மொழி மாறுதல் நிலை ஓன்றைச் சுட்டுகிறார். அவர் காலத்தில் வழக்கிழந்த ஒன்று அவருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வழங்கியது என்பதற்குச் சரியான சான்றுகளையும் அவர் தரவில்லை. மேலும், இன்றைய தமிழிலும் ஒளகாரம் குறிப்பிடைச் சொற்களாகப் பயன்படுவதில்லை. மாறாக, மற்ற உயிரெழுத்துகள் தனித்தோ, சேர்ந்தோ குறிப்பிடைச் சொற்களாகப் பயன்படுகின்றன. ஆஆ, ஓஓ, ஐயோ, அடே, அந்தோ, சீசீ, ஏஏ என்பன சில சான்றுகள். தொல்காப்பியர் காலத்திலேயே அந்தோ, அன்னோ போன்றவையும் வழங்கின என்பது தெரிகின்றது. எனவே, தெய்வச்சிலையார் உரை தமிழில் அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து வழக்கில் இருந்துவரும் குறிப்பிடைச் சொற்களை எடுத்து விளக்குவதால் சூத்திரமும் உரையும் மிகு பயனுள்ளனவாக இருக்கின்றன. தமிழ் மொழியமைப்பின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் காட்டுகிறது. 3, சூத்திரத்தின் எழுவாய் பயனிலைத் தொடர் அமைப்பும் சேனாவரையருக்கு ஆதரவாக இல்லை. ஐந்தாவது வரி |