வாய் வரும் பிற சொற்களும் இடைச் சொற்களாய்க் குறிப்புப் பொருள் பற்றி வரும். அம்முதனிலைகளொடு கூடியல்லது குறிப்புப் பொருள் தாரா என்பதறிய நன்றீற்றேயும் அன்றீற்றேயும் அந்தீற்றோவும் அன்னீற்றோவும் என விதந்து கூறினார். அதனான் ஏகார ஓகார விதி கூறிய வழி ஓதாது இவற்றை வேறு கூறினார் என்க. தனித்தும், ஓரோ வழி இரட்டித்தும் வருதலின் பிரிவிலசைநிலை கூறிய அதிகாரத்து வைத்து ஓதினார் என்க. வரலாறு :- தவறு செய்த ஓருவன் தான் செய்ததனை மதித்துக்கூறும் வழி அதனை உள்ளத்தான் வெறுப்பான் ஒருவன், நீ செய்தது நன்றே நன்றே என்ற வழித் ‘தீது’ என்னும் குறிப்புத் தோன்றுமாறு காண்க. நல்லது செய்து துன்புறுவானை நோக்கி ஒருவன் இஃது ஊழன்றே வருந்தற்க, என்புழி ஊழ் நுகர்வியாது செல்லாது என்னும் குறிப்புணர்த்துமாறு காண்க. அந்தோ எந்தை அடையாப் பேரில் (புறம்-261) என்பதும் அன்னோ என்னாவது கொல்தானே (புறம்-345) என்பதும் இரங்கற் குறிப்புணர்த்தி நிற்குமாறு காண்க. அன்னபிறவும் என்றதனான். என்னே! எனவும் அச்சோ! எனவும் ஐயோ, எனவும் வருவன இரக்கம், அவலம், முதலிய குறிப்புணர்த்தி நிற்குமாறும், ஒக்கும் ஒக்கும் என்பது ஐயக்குறிப்புணர்த்தி நிற்குமாறும் கண்டு கொள்க. இன்னும் அதனானே அஆ இழந்தான் என்று எண்ணப்படும் எனவும் அம்மம்மா இனிப் பொறேன் எனவும் சிறு பான்மை ஆகார ஈற்றினவாய்க் குறிப்புணர்த்தி வருவன பிறவும் சான்றோர் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. உம்-மயக்கம் |