உ-ம் : சாத்தனும் வந்தான் என்றவழிக் கொற்றனும் வரும் என்றாதல், வந்தான் என்றாதல் கூறுதலன்றி, வாரான் என்னற்க. ஒரு தொழிலே கூறல் வேண்டும் என்றவாறு. நச். இது முற் கூறிய வும்மைகள் மயங்கும் என்கின்றது. இ-ள் : எச்ச உம்மையும்-எச்சப் பொருண்மையினை உடைய உம்மையும், எதிர்மறை உம்மையும்-அதனை முடிக்க வரும் எதிர்மறைப் பொருண்மையினையுடைய உம்மையும், தத்தமுள் மயங்கும் -தொடரால் வந்து தத்தமுள் மயங்கும், உடனிலை இலவே- அங்ஙனம் மயங்கிற்றேனும் தன்வினை ஒன்றிய முடிபு கொள்ளா, எ-று. உ-ம் :‘சாத்தனும் வந்தான்: இனிக் கொற்றனும் வரினும் வரும்’ என்புழிச் சாத்தனும் கொற்றனும் என்னும் எச்சவும்மைகள் ‘வரினும்’ என்னும் எதிர்மறை உம்மையோடு தொடர்ந்து நின்று ஒருவினை கொள்ளாது. இறப்பும் எதிர்வும் பற்றி வரும் வேறு வினை கொண்டவாறு காண்க. இங்ஙனம் உலக வழக்கு உண்மையானும், ஆசிரியர் ‘மயங்கி யுடனிலை யில’ என்னாது, ‘மயங்கும் உடனிலை யில’ எனச் சூத்திரம் செய்தமையானும் இதுவே பொருள் என்று உணர்க. இவ்விரண்டு உம்மையும் எச்சமாதலின் இவற்றிற்கே மயக்கம் உளது என்று கூறினார். ஒன்றென முடித்தல் என்பதனான், ‘வடுகரசரும் வந்தார் இனித் தமிழ்நாட்டு மூவேந்தரும் வரினும் வருவர்’ என எச்ச உம்மையோடு முற்றும்மை தொடர்ந்து வேறுவினை கோடலும் கொள்க. ஆதி. எச்சஉம் முடன் எதிர்மறை உம் சேர்த்துப் பொருள் மயங்க வைத்தல் ஆகாது. (எச்சவும்மையுடன் மற்றொரு எச்சவும்மை சேரலாம்) பாண்டியனும் இறந்தான் -உம் எச்சவும்மை தேவியும் உடன் இறந்தாள் என்று அடுத்த எச்சவும்மை சேர்ந்தது. ‘பாண்டியனும் இறந்தான் கண்ணிகியும் இறவாதிருந்தாள்’ என உடன்பாடும் எதிர்மறையுமாக இணைத்தலாகாது. யானும் வருவேன் அவனும்வருவான் என்பது முறை. |