நச். இது முற்றும்மை எச்ச வும்மையாம் பொருள் தரும் என வழு அமைக்கின்றது. இ-ள் : முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் முற்றும்மை யடுத்துநின்ற பெயரும் வினையும் சார்ந்த சொல்லிடத்து, எச்சக்கிளவி உரித்தும் ஆகும்-எச்சச் சொல் உரித்துமாகும், எ-று. எனவே எச்சப் பொருள் குறியாது நிற்றலே பெரும் பான்மை, ஏற்புழிக் கோடலால் இஃது எதிர்மறைக் கண்ணது எனக் கொள்க. உ-ம் :‘பத்தும் கொடால்’, ‘அனைத்தும் கொடால்’ என்னும் முற்றும்மைகள், ‘சில கிடக்கக் கொடு’ என எச்சப் பொருள் உணர்த்தி நின்றவாறு காண்க. ‘தொகைச் சொல்’ என்றதனானே ‘எல்லாரும் வாரார்’ எனப் பொருட் பெயர்க் கண்ணும் கொள்க. ‘பத்துங் கொடு’, ‘பிறவும் கொடு’ என்பது கருத்தாயின் அது எச்சவும்மையாம். ஆதி. முற்றும்மையுடன் கூடிய தொடர் மொழியில் எஞ்சிய தாய்ப் பொருள் குறிக்கவும் இடம் உண்டு. எல்லாரும் வெற்றி பெற்றவர்கள். யாவரும் வெற்றி பெற்றார்கள் எனப் பொருள்தரினும், ஆங்கு ‘ஒரு சிலர் தோல்வி யுற்றார்’ எனவும் பொருள் எஞ்சி நிற்கின்றது. இலங்கை யரக்கரில் யாவருங் கொடியர்-இது ‘ஒருவர் மட்டும் நல்லவர்’ என எஞ்சு பொருட்கு இடம் தருகிறது. ஆய்வு : பாண்டவர் ஐவரும் நல்லவர்-இங்கு எஞ்சு பொருட்கு இடம் இல்லை. முடிமன்னர் மூவரும் வந்திருந்தனர்-எஞ்சு பொருள் இல்லை. ஆசிரியர். “ முற்றும்மைத் தொடர்மொழி எதிர்மறையாயினும், ஈற்றிசைபெறினும் எச்சப்பொருட்கு இடனுரித்தாகும்” என்று கூறியிருப்பின் அஃது சிறப்புடைத்தாகும். உ-ம் :எல்லாரும் வந்திலர்-எதிர்மறை ஒரு சிலர் வந்துளர் எனக் குறிக்கின்றது. |