என்பதற்கு எண்ணுப் பொருள் வழிப்பட்டன எனக்கொண்டனர். அடுத்த சூத்திரம் ‘அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதி’ என்றமையின் அவ்விரண்டும் எண்ணுப் பொருளில் வரும் என்பது கூறுதலின் ஈண்டும் கூறுதல் வேண்டுவதன்று என்பதும் நிலன் எனா என்பதை நிலன் எனாவும் என்னும் வழக்கில்லை. அதனால் நிலன் எனாவும் என்பது நிலன் எனா என நின்றது என்பதும் பொருந்தாது என்பதும் இவர் கருத்து. பால. கருத்து :- எனா, என்றா என்னும் இடைச் சொற்கட்காவதொரு மரபு கூறுகின்றது. பொருள் :-உம்மை தொக்குவரும் எனாவென்னும் இடைச்சொல்லும் ஆகார ஈற்றதாகிய என்றா என்னும் இடைச்சொல்லும் ஆகிய இரண்டு இடைச் சொற்களும் எண்ணுதற்பொருளினவாம். “ஆ ஈறாகிய என்று” என்றது ‘என்றா’ என்னும் இடைச்சொல்லாம். இவை முறையே என, என்று என்பனவற்றின் திரிபாயினும் எண்ணுப் பொருள் பற்றியல்லது இவை வாராமையின் வேறாக ஓதப்பட்டன. எனா-என்றா என்பவை “என்று சொல்லப்படுவன” என்னும் பொருளினவாதலின் அவற்றுள் எண்ணும்மை மறைந்து நின்று எண்ணுப் பொருள் தரும் என்பது தோன்ற “உம்மை தொக்க எனா என்கிளவியும்... என்றென் கிளவியும்” என்றார். உம்மை தொக்கவழி அவை வினைப் பொருள் ஒழித்து எண்ணுப் பொருள் மட்டுமே பயந்து நிற்றலின் “எண்ணுவழிப்பட்டன” என்றார். எ-டு : நிலனெனா நீரெனாத் தீயெனா வளியெனா வானெனாப்பூதம் ஐந்து எனவும். நிலனென்றா நீரென்றா தீயென்றா வளியென்றா வானென்றாப் பூதமைந்து எனவும் வரும். “எண்ணுவழிப்பட்டன” என்றதனான் இடையிட்டு வருதலும் கொள்க. எ-டு : ‘யாத்தசீரே யடியாப் பெனாஅ’ எனவும், ‘ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றாஅ’ எனவும்வரும். |