உ-ம் : “பாட்டும் கோட்டியு மறியாப் பயமில் தேக்கு மரம்போல நீடிய ஒருவன்” “இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி” என உம்மை எண்ணின்கண் உருபு தொக்கவாறு கண்டு கொள்க. வரையார் என்றதனான் ஆண்டும் எல்லா வுருபந் தொகா; ஐயும் கண்ணுமே தொகுவன எனக் கொள்க. ‘யானை தேர் குதிரை காலாள்எறிந்தார்’ என உம்மையும் உருபும் உடன் தொக்க வழி, உம்மைத் தொகை என்னாது உருபுத் தொகை என்க என்பது இச்சூத்திரத்திற்குக் கருத்தாக உரைத்தாரால் உரையாசிரியர் எனின், அஃது உம்மைத் தொகையாதலின் ஒரு சொல் நடைத்தாய் உருபேற்றானும் பயனிலை கொண்டானும் நிற்கும்; அத் தொகையிடை உருபன்மை சிற்றறிவினார்க்கும் புலனாம்; அதனான் அஃதவர்க்குக் கருத்தன்மை சொல்ல வேண்டுமோ என்பது. தெய். எண்ணும்மைக்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : உம்மையான் எண்ணப்பட்ட பொருளின்கண் வரும் உருபாகிய உம்மை ஒரோவிடத்துத் தொகுதலும் நீக்கார், எ-று. எனவே, சொற்றொறும் உம்மை கொடாக்காலும் உம்மையெண்ணாகும் என்றவாறாம். உ-ம்: இயங்குபடை யரவம் எதிர்பரந்தெடுத்தல், வயங்கல் எய்திய பெருமையானும், கொடுத்தல் எய்திய கொடைமையானும் (புறத்திணை.8) என உம்மை ஒரோ வழித்தொக்கு நின்றது. இவ்விலக்கணம் எண்ணும்மைக்கே யுரித்து. நச். இஃது உம்மையும் உருபும் தொக்கவழியும் உருபுத் தொகை எனப்படும் என வழு அமைத்தது. இ-ள்: உம்மை எண்ணின் - உம்மையான் வரும் எண்ணின்கண், உருபு தொகல் வரையார்- இரண்டாவதும் ஏழாவதும் தொக்கு நிற்றலை நீக்கார் ஆசிரியர், எ-று. உம்மைஎண் எனப் பொதுப்படக் கூறுதலின், உம்மை தொக்குழியும் விரிந்துழியும் உருபு தொகுதல் கொள்க. |