ஆதி. எண்ணுப் பொருளில் வரும் உம் என்னும் உருபு மறைதலைக் கடியார், ஒப்புவர். மலையும் மலரும் கயலும் மடுவும் வேயும் முத்தும்-உம் மறைந்து, மலை மலர் கயல் மடு வேய் முத்து மாதரிடம் உள எனப் புலவர் கூறுவர். மறுபொருள் எண்ணுப் பொருள் உம் நிற்குமிடத்தில் வேற்றுமையுருபு மறைதலும் முறையே. இது சிறந்த பொருளன்று. மேளமும் சூழலும் சிங்கியும் கொண்டு யாவரும் வந்துள்ளார்கள்- இது மேளத்தையும் சூழலையும் சிங்கியையும் கொண்டு யாவரும் வந்துள்ளார். முதலில் ஐ உருபு தொக்கதை அறிக. சுப். ‘உம்மை யெண்ணின் கண் உருபு தொகுதல் வரையப்படாது என்று சேனாவரையரும் நச்சினார்க்கினியரும்’ ‘உம்மையான் எண்ணப்பட்ட பொருளின் கண் வரும் உருபாகிய உம்மை ஓரிடத்துத் தொகுதலும் நீக்கார்’ என்று தெய்வச் சிலையாரும் இச்சூத்திரத்திற்குப் பொருள் கூறினர். சந்தருப்பத்தை நோக்கின் தெய்வச் சிலையார் கூறுவது பொருத்தமாய் இருக்கலாம் எனத் தோற்றுகிறது. இச்சூத்திரம் தொகை என்று கூற வேண்டும் என விதிக்கின்றது என்றனர் உரையாசிரியர். அவரைச் சேனாவரையர் “உம்மைத் தொகையாதலின் ஒரு சொல் நடைத்தாய் உருபேற்றானும் பயனிலை கொண்டானும் நிற்கும்; அத்தொகையிடை உருபின்மை சிற்றறிவினார்க்கும் புலனாம் என்று மறுத்தனர். இளம் பூரணம் நமச்சிவாயர் பதிப்பில் இச்சூத்திரத்தினடியில் “யானையும் தேரும் ஆளும் எறிந்தார் என்பது, யானையையும் தேரையும் ஆளையும் எறிந்தார் எ-று. உம்மையெண்ணின் கண் உருபு தொக்கவாறாயிற்று” என்ற வாக்கியந்தான் உளது. இவ்வாக்கியத்துக்கு மேல் ‘யானை தேர் குதிரை காலாள் ஏறித்தார், என உம்மையும் உருபும் உடன் தொக்கவழி உம்மைத்தொகை என்னாது உருபு தொகை என்க’ என்ற வாக்கியமும் உரையாசிரியரால் கூறப்பட்டிருத்தல் வேண்டும் என்பது, இதன்மேல், சேனாவரையர் கூறும் மறுப்பாலும் ‘உம்மையும் |