உ-ம்: ‘நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து’ ‘நாரரி நறவின் மகிழ் தூங்குந்து’ என வரும். ‘இடனுமாருண்டே என்றதனான். இத்திரிபு பெயரெச்சத் திற்கே கொள்க. வெள். இஃது உம் என்னும் இடைச் சொல் திரியுமாறு கூறுகின்றது. இ-ள் ; வினை செயல் மருங்கிற் காலமொடு வரும்இடைச் சொற்களுள் உம் ஈறு உந்து எனத் திரியும் இடமும் உண்டு. எ-று. ஈண்டு உம் என்றது. ஏற்புழிக் கோடலால் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டிற் காலம் உணர்த்தி வரும் உம் ஈற்றினை எனக் கொள்வர் உரையாசிரியர். ‘இடனுமா ருண்டே’ என்ற தனால் இத்திரிபு செய்யுளிடத்து வரும்’செய்யும்’ என்னும் பெயரெச்சத்தின் கண்ணது எனக் கொள்வர் பவணந்தி முனிவர். ‘செய்யுமென் எச்ச ஈற்றுயிர் மெய் சேறலும் செய்யுளுள் உம் உந்தாகலும்’ (நன். 340) என வரும் தொடர் இங்கு ஓப்பு நோக்கத் தகுவதாகும். செய்யும்’ என்பது வினைச் சொல்லாயினும் அதனீற்றிற்காலம் உணர்த்தி நிற்கும் உம் என்பது இடைச் சொல்லாதலின் அதன் திரிபு கூறும் இச்சூத்திரம் இடையியலில் இடம் பெற்றது. உ-ம்: ‘தண் குரவைச் சீர்தூங்குந்து’ எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து (புறம்-24) என வரும் தொடர்களில் ‘சீர் தூங்’கும் என்பது ‘சீர் தூங்குந்து’எனவும், ‘தரூஉம்’ என்பது தரூஉந்து எனவும் உம் உந்தாய்த் திரிந்தமை காண்க. ஆதி. உம் என்னும் சொல் உந்து எனத் திரியும் இடமும் உண்டு. செய்யுள் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று பண்டை முறையில் செய்யுந்து என வரும். சீர் சிறக்கும்-சீர் சிறக்குந்து மலர் விரியும்-மலர் விரியுந்து. |