நச். இஃது எண்ணிடைச் சொற்கள் வினைச் சொற்கண்ணும் வரும் என்கின்றது. இ-ள் : எண்ணு வினையொடு நிலையினும் நிலை திரியா.-எண்ணிடைச் சொற்கள் பெயர்ச் சொல்லோடு அன்றி வினைச் சொல்லோடு நிற்பினும் தத்தம் நிலைமையின் திரியா, அவற்றவற்று இயல்பு நினையல் வேண்டும்- அவற்றவற்று இலக்கணங்களை ஆராய்ந்து அறிதல் வேண்டும் ஆசிரியன், எ-று. உ-ம் : ‘உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வ லத்தை யானே’ (புறம். 166), ‘உண்ண வெனத் தின்னவெனப் பாடவென வந்தான்’ என வரும். ஒழிந்த எண் வினையோடு வந்தன உளவேற் காண்க. ‘உண்டு தின்று ஓடி வந்தான்’ என்பது தொகையின்றேனும் செவ்வெண்ணாம், சிறுபான்மை முற்றும் தொகை பெற்று வருதலின், ‘சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான். வேடன் வந்தான் மூவரும் வந்தமையால் கலியாணம் பொலிந்தது’ என முற்றுச் செவ்வெண் தொகை பெற்று வரும். இவை எழுவாயும் பயனிலையுமாய் நிற்றலின் எண்ணப்படா எனின் ஒரு பொருள் வேறுபாட்டான் எண்ணினார். இதனை ‘இம் மூவரும் வரின் கலியாணம் பொலியும்’என்று இருக்கின்றான் கூற்றாகக் கொள்க. என்னை? ‘முன்னர்ச் சாத்தன் வந்தான்; பின்னர்க் கொற்றன் வந்தான்; அதன் பின்னர் வேடன் வந்தான்; இவர்கள் ஒருங்கு வந்திலரேனும், முடிவில் வந்து நிற்றலின் இது முடிவு போயிற்று? என்று கூறினானாதலின், இம்மூவர் என்றமையான் பெயர்தொகைபெற்றதேனும், ‘வந்தமையான்’ என்றதனான் வினையும் தொகை பெற்று, அவ்வினையாற் கலியாணம் முடிந்தவாறும் உணர்க. இம் முற்று அடுத்து வந்தனவும் செவ்வெண்ணாம். இனி, ‘யாங்கண்டபொழுது இம்மாடத்துமேல் நின்றானும் இருந்தானும் கிடந்தானும் இவன்’ என முற்றுச் சொற் கண்ணும் எண்ணும்மை வருதல் கொள்க. பெயரெச்சத்தில் எண்ணிடைச் சொல் வாரா. எண்ணிடைச் சொல் பிரிந்து ஒன்றுதல். |