எனவும் இவை ஒரோ வழிப் பிரிந்து நின்று எல்லாப் பெயரோடும் ஒன்றி முடிந்தவாறு கண்டு கொள்க. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் ‘என்னும்’ என்னும் சொல்லும் இவ்வாறு வரும் எனக் கொள்க. “மியா யிக மோமதி யிகுஞ்சின் என்னும் ஆவயினாறும் முன்னிலை யசைச்சொல்” (இடை.25) என்றவழி ‘என்னும்’ எனவும் வந்தது. ‘எண்ணினுட் பிரிந்து’ எனப் பொதுப்படக் கூறினமை யான் எல்லா எண்ணொடும் வரப்பெறும் என்று கொள்க. “சொல்லெனப் படுவ பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” (பெய.4) என்ற வழி ஏகாரம் எண்ணின் கண் வந்தது. பிறவும் பிற எண்ணொடு வருமாறு வந்த வழிக் கண்டு கொள்க. நச். இஃது எண்ணிடைச் சொற்கள் பிரிந்து சென்று ஒன்றும் என்கின்றது. இ-ள் : என்றும் எனவும் ஒடுவும் தோன்றி-என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒருவழித் தோன்றி, எண்ணினுட் பிரிந்து ஒன்று வழியுடைய-எண்ணினுட் பிறவழியும் பிரிந்து சென்று ஒன்றும் இடம் உடைய, எ-று. உ-ம் : ‘வினை பகை என்றிரண்டின் எச்சம்’ (குறள் 674) ‘கண்ணிமை நொடி யென’(நூன்.7) பொருள் கருவி காலம், வினையிடனொ டைந்தும் (குறள்.675) என்புழி வினையென்று, கண்ணிமையென, பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு என்று பிறவழிச் சென்று ஒன்றியவாறு காண்க. ஒன்று வழியுடைய என்றதனால் சொற்றொறும் நிற்றல் பெரும்பான்மை; அஃது இக்காலத்து அரிது. இடைச் சொற்குப் பொருள் கோடல் |