‘குரை கழல்’ என்றவழிக் குரை என்பது ஒலிப் பொருண்மையுணர்த்திற்று. பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. நச். இஃது எழுவகை இடைச் சொற்கும் பொருட் புறனடை கூறுகின்றது. இ-ள் ; அவ்வச் சொல்லிற்கு அவை அவை பொருள் என மெய்பெறக் கிளந்த இயல ஆயினும்-முற்கூறிய இடைச்சொற்கள்தாம் அவ்வச் சொற்குக்கூறிய அவையே அவையே பொருள் என நிலை பெறச் சொல்லப்பட்ட இ யல்பைபுடைய ஆயினும், வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்து வேறுபடினும்-தாம் அடைந்து வரும் வினையோடும் பெயரோடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்துவரினும் தெரிந்தனர் கொளல்-ஆராய்ந்து கொள்க, எ-று. வேறு பொருள என்று உணர்தற்குச் சார்பு வினையும் பெயரும். உ-ம் ; ஓகாரம் ‘சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரோ’ என ஈற்றசையாயும் ‘கலங் கொண்டன கள்ளென்கோ காழ்க் கொண்டன சூடென்கோ’ என எண்ணாயும், ‘நீங்கினளோ என் பூங்கணோளே’ (யாப்.வி.99 உரை மேற்) என இரக்கக் குறிப்பாயும் வந்தது. என என்பது, ‘ஊரெனப்படுவது உறையூர்’ என சிறப்பின் கண் வந்தது. ‘அவர் நமக்குத் தஞ்சம் அல்லர்’ எனத் தஞ்சக் கிளவி பற்றலர் என்கின்றது. மா, ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ என முன்னிலைக்கண் அசைச் சொல்லாயும், ‘ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே’ (புறம். 193) என முன்னிலை யன்றி அசைச் சொல்லாயும் வந்தது. ‘அதுமன் கொண்கன்தேரே’ என மன் அசை நிலையாய் வந்தது. சாரியை இன் ‘காப்பின் ஓப்பின்’ (வேற். 11) என அசை நிலையாயும் வந்தது. |