என்றிசின்யானே’ (நற்.55) எனவும், மாள, தெய்ய, என, ஆம், ஆல் என்பனவும் அசைநிலையாய் வந்தன. ‘குன்று தொறாடலும் நின்ற தன் பண்பே’ (திருமுருகு.217) எனத் தொறு என்பது தான் சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நிற்கும். ஆனம் ஏனம் ஓனம் என்பன எழுத்துச்சாரியை. பிறவும் எடுத்தோதாத இடைச் சொல் எல்லாம் இப்புறனடையாற்றழீஇக் கொள்க. இடையியல் முற்றிற்று. தெய். இது இடைச் சொற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் ; எடுத்தோதப் பட்ட ` இடைச்சொல்லன்றி அத்தன்மைய பிறவுமாகி வருவனவும் இசைநிறை யசைநிலையாகி வருவனவும் பொருள்படுமாறு அறிந்து கொள்க. எ-று. உ-ம்; அவற்றுட் சில வருமாறு; ‘குன்று தொறாடலும் நின்றதன் பண்பே’ (திருமுருகு 217) என்றவழிக் ‘குன்று தொறு’ என்பது ‘குன்று பல’ என்னும் பொருண்மையுணர நின்றது. ‘சிறிது தவிர்ந்தீக மாளநின் பரிசிலர்’ என்றவழி மாள என்பது அசை நிலையாயிற்று. ‘பிரியின் வாழா தென்போ தெய்ய’ (ஐங்.) என்ற வழி, தெய்ய என்பது அசைநிலையாயிற்று. ‘எனவாங் கொள்ளழற் பரந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற்றிசினே’ என்ற வழி எனவும் ஆங்கும் அசைநிலையாயின. “அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை, வஞ்சிப்பதோரும் அவா” (குறள் 366) என்றவழி ஓரும் என்பது அசை நிலையாயிற்று. ‘செலீஇய ரத்தை நின்வெகுளி’ என்றவழி அத்தை அசை நிலையாயிற்று. “அரும் பெறலுலகம் நிறைய, விருந்து பெற்றனரால் பொலிக நின் புகழே” (புறம்.62) என்ற வழி ஆல் அசைநிலையாயிற்று. |