‘வினை செயல் மருங்கின் காலமொடு வருந’ என்றது, வினைச் சொல்லை முதல் நிலையும் இறுதி நிலையும் இடை நிலையும் ஆகப் பிரித்துச் செய்கை செய்யுமிடத்துக் காலம் காட்டியும் பால் காட்டியும் அதனகத்து உறுப்பாய் நிற்பனவற்றை இவை வினையியலுட் கூறப்பட்டன. ‘வேற்றுமைப்பொருள்வயின் உருபாகுந’ என்றது, ஐ. ஒடு, கு, இன், அது, கண் என வரும் வேற்றுமையுருபுகளை. இவை வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைத்தல் - சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசை நிலை என்பது காரணப் பெயர். அசை நிலைக்கிளவியாகி வருவன மியா, இகும் முதலாயின. செய்யுட்கண் இசை நிறைத்து நிற்பன இசை நிறையாம், இசை நிறையாவன ஏ முதலாயின. ‘தத்தங் குறிப்பிற் பொருள் செய்குந’ என்றது, தத்தங் குறிப்பினாற் பொருளுணர்த்தும் இடைச்சொற்களை குறிப்பு என்பது சொல்லுவான் கண்ணதாயினும் அவன் குறித்த பொருளைச் சொற்கள் தாங்கி நிற்றலின் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குந’ என்றார். அசை நிலை, இசைநிறை, தத்தங் குறிப்பிற் பொருள் செந்குந ஆகிய இம் மூவகை யிடைச் சொற்களும் இவ் இடையியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ‘ஒப்பில் வழியா பொருள் செய்குந’ என்றது, ஒப்புமை யுணர்த்தும் ‘ஒத்தல்’ என்னும் சொல் இல்லாத நிலையில் ஒப்புமைப் பொருளையுணர்த்தும் அன்ன ஆங்க முதலிய உவமவுருபுகளை. பொருள் புலப்பாடாகிய உவமைக்குரிய இவ்வுருபுகள் பொருளதிகாரத்தில் உவமவியலில் விரித்துரைக்கப்படும். இடைச்சொல் ஏழனுள் முதல் நின்ற மூன்றும் மேலே உணர்த்தப்பட்டமையால் முன் வைத்தார். ஒப்பில் வழியாற் பொருள் செய்குந பின்னர் உணர்த்தப்படுதலின் இறுதிக் கண் வைத்தார். எஞ்சிய மூன்றும் இவ்வியலில் உணர்த்தப்படுதலின் இடை வைத்தார். ஆதி. இ-ள் ; பத்து + மூன்று = பதின்மூன்று - இன் பத்து + பத்து = பதிற்றுப்பத்து -இற்று முறுக்கு + வடை = முறுக்கும் வடையும் - உம் |