னும் இவ்விருவரும் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் அவர்கள் காலத்தில் காலவெழுத்துகள் தனிமையாய் இடைச்சொல்லாக வழங்கப்பட்டனவாதல் வேண்டும். ‘அம்முடிபுணர்த்தாமைக்குக் காரணம்’ புணரியல் நிலையிடை யுணரத் தோன்றா (குற்றி. 76) என்புழிச் சொல்லப்பட்டது எனச் சேனாவரையர் கூறினர். அங்கு அவரே கூறினரா? அன்றி ‘மெய்யொருங்கியலும்’ என்றதனால் உண்டான் என் புழிச் செய்கையும் காலமும் பாலும் தோற்றி நிற்குமாறு பிரித்துப் புணர்க்கப்படாமை கொள்க’ என்று உரையாசிரியர் கூறியதைக் குறித்தனரா? முன்னர்க் கூறியதாயின் சேனாவரையர் எழுத்ததிகாரத்துக்கும் உரை எழுதினர் என்பது பெறப்படும். வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந : இதன் உரை கூறுமிடத்துச் சேனாவரையர் ‘அனையை யாகன் மாறே’ (புறம். 4) என்றவிடத்து மாறு மூன்றாம் வேற்றுமைக்கண் வந்தது என்று கூறினர். புறநானூற்றுரையாசிரியர் ‘அத்தன்மையாதலால்’ என்று அதற்குப் பொருள் கூறினர். நச்சினர்க்கினியர் ‘மாறு என்னும் இடைச்சொல் வினையையடுத்துக் காரணப்பொருள் உணர்த்தி நிற்றலின் மூன்றாம் வேற்றுமைப் பொருள் உணர்த்தி நின்றதல்லாமை உணர்க’ என்று சேனாவரையரை மறுத்தார். மூன்றாம் வேற்றுமைப் பொருள் கூறுமிடத்து ‘இன்னான் ஏது’ (வேற். ) என்ற வாக்கியத்தால் காரணப்பொருளும் மூன்றாம் வேற்றுமைப் பொருளாம் என்று கூறியதனானும், ஆதல் என்ற தொழிற்பெயரையடுத்துக் காரணப் பொருளைக் கொண்டே ‘மாறு’ வந்திருத்தலானும் நச்சினார்க்கினியர் மறுப்புப் பொருந்துமா? அவ்வாறே ‘இயல்புளிக் கோலோச்சு மன்னவன்’ (குறள் 545) என்னுமிடத்து ‘உளி’ என்பது மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தது என்றார் சேனாவரையர். பரிமேலழகரும் ‘உளி’ என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச் சொல் எனவே கூறினர். நச்சினார்க்கினியர் ‘இயல்புளிக் கோலோச்சு மன்னவன் என்புழி முறைமையிலே செங்கோல் நடாத்தும் என ஏழன் உருபுவிரிதலானும், உளி என்பது மூன்றன் உருபின் பொருள்பட வந்ததன்று’ என்று மறுத்தனர். ஏழனுறுபு விரிந்ததாகக் கொள்ளினும், ‘உளி’ என்பதை இடைச்சொல் என்றே கொள்ள குறையென்? சேனாவரையத்தில் ‘சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின் அசைநிலைச் சொல்லாயின என்பாரும் உளர்’ என்ற வாக்கியம் உளது. இங்கு வேறுபடுத்து நிற்றலான் என்பதன் பொருள் இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. |