வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுநவும் : இதனை வேற்றுமைவயின் உருபு ஆகுநவும், வேற்றுமைப் பொருள்வயின் ஆகுநவும் என இருவகைப்படுத்துக. வேற்றுமையின் உருபு ஆகுந ஐ ஆல் கு இன் அது கண் என்பனவாம். வேற்றுமைப் பொருள்வயின் ஆகுந மூன்றாம் வேற்றுமைக்குரிய கொண்டு உடன் என்பனவும், ஐந்தாம் வேற்றுமைக்குரிய நின்று இருந்து என்பனவும், ஏழாம் வேற்றுமைக்குரிய கால் கடை உழை முதலியனவும் ஆம். உதாரணம் ; மரத்தை மரத்தால் முதலியனவும் வாள் கொண்டு வெட்டுனான் அவனுடன் போனான் முதலியனவும், மரத்தினின்று வீழ்ந்தான், மரத்தினிருந்து வீழ்ந்தான் என்பன மரத்து நின்று வீழ்ந்தான்; மரத்திருந்து வீழ்ந்தான் என வருவன போல்வனவும், ஊர்க்கால் எழுந்த சோலை முதலியனவும் ஆம். அசை நிலைக்கிளவியாகி வருவன : இதனை அசைநிலையாகி வருவன எனவும் அசைநிலைக்கிளவியாகி வருவன எனவும் இருவகையில் கொள்க. அசைநிலையாகி வருவன சொல் வடிவு பெறாதன. அவை ஏ, ஓ முதலியன. கிளவி (சொல்) ஆகிவருவன சொல் வடிவு பெற்றன. அவை போலும், 1 வைத்து முதலியன, ‘பாண்டிச்சேரி என்றோர் ஊர் உண்டே’ என்பதில் ஏகாரம் ஈற்றில் அசையாய் வந்தது. பாண்டிச்சேரி என்றோர் ஊர் உண்டுபோலும். இதில் போலும் என்பது சொல்வடிவுள்ள அசைநிலை. ‘பாண்டிச்சேரியில் வைத்து அவனைக்கண்டேன்’ இதில் வைத்து என்பது சொல் வடிவு பெற்ற அசைநிலை. ஒப்பில் வழியாற் பொருள் செய்குந : ஒப்பு வழியாற் பொருள் செய்குந எனவும் ஒப்பு இல்வழியாற் பொருள் செய்குந எனவும் கொள்க. ஒப்பு வழியாற் பொருள் செய்தலாவது உவமை வகையால் வருவது. அது போலும் என்பது. மதி போலும் முகம் என்று காண்க. ,இதில் போலும் என்பது உவம உருபு. இது உவம உருபிடைச்சொல் எனப்படும். ஒப்பு இல்வழியாற் பொருள் செய்தலாவது உவமை கருதினும் அதனின் வேறுபாடு தோன்றப் பொருள் கொள்ளுமாறு அமைவது. அவ்வாறு அமைவன புரைய, எள்ள, கடுப்ப முதலியவாகிய (உவமப் பொருளில் வரும்) சொற்கள், மதிபுரையும் முகம் என்பது மதிபோலும் முகம் என்பதாயினும் மதியை விட உயரும் முகம் எனக் கருதுமாறும் அமைந்தது காண்க. இப்படியே மதியெள்ளுமுகம் மதிகடுக்கும் முகம் முதலியவும் கொள்க.
1. வைத்து என்பது திருநெல்வேலி மாவட்ட வழக்கில் வரும் இடைச்சொல். |