‘பண்டறியாதீர்பால்’ 1 ‘படர்கிற்பீர் மற்கொலோ’ (கலி. 29) - இவை பிறிது நின்றன. ‘அன்னவை யெல்லாம்’ என்றதனால், ‘மன்னைச்சொல்லே’, கொன்னைச் சொல்லே’ எனத் தம்மையுணர நின்றவழி ஈறு திரிதலும், ‘னகாரை முன்னர்’ என எழுத்துச் சாரியை ஈறு திரிதலும் கொள்க. கல். என் - எனின், இன்னும் அவற்றிற்காவதோர் விதியுணர்த்து தல் நுதலிற்று. இ-ள் : மேல் வகுக்கப்பட்டவைதாம் முன்னிடத்தும் பின்னிடத்தும் பெயர் வினையாகிய மொழிகளை அடைந்து வருதலும், அச்சொற்கள் தம்மீறு ஒருவழி எழுத்து வேறுபட்டு வருதலும், மற்றோர் இடைச்சொல் தான் நிற்குமிடத்தே நிற்றலுமாகிய அத்தன்மையையுடைய இலக்கணம் எல்லாவற்றிற்கும் இலக்கணமாகதற்குரிய, எ-று. உ-ம் : முன்னடுத்தது; அதுமன், கேண்மியா என்பன. பின்னடுத்தது: கொன்னூர், ஓஒதந்தார் என்பன. ஈறு திரிந்தது: மன்னைக் காஞ்சி, இஃதொத்தன் என்பன. பிறி தவண் நிலையல்: மகவினை, மடவை மற்றம்ம என்பன. மன்னைச் சொல், தில்லைச் சொல் என்பனவோவெனின், அவை பொருளுணர்த்தாது சொல் தம்மை யுணர நின்றவாகலான் ஈண்டைக்கு ஆகா வென்பது. மற்றென்னை திரிபு பெறுமாறெனின், உடம்பொடுபுணர்த்தல் என்பதனான் அவற்றை யிவ்வாறு ஓதிய சூத்திரங்களால் பெறுதும் என்பது. 2வெள். (சேனாவரையர் உரையே) ஆதி அவ்விடைச் சொற்கள் மொழியை யடுத்து முன் வருதலும், பின் வருதலும், தம் ஈறு வேறுபட்டு வருதலும், மற்றொரு இடைச்சொல் தன்னிடம் சேர்தலும் இத்தன்மையனவாக உள.
1. ‘படர்கிற்பீர் மற்கொலோ’ என்பதில் மன் என்னும் இடைச்சொல்லுடன் கொல் எனும் பிறிதும் ஓர் இடைச்சொல்லும் நின்றது. 2. சேனாவரையரையே பின்பற்றி எழுதிய வுரைகளாயின் அவை இனிவருஞ் சூத்திரங்களில் விடப்படும். |