மன் மன்னை என நின்றது. உ-ம் : சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம் 235) என்புழி மன் கழிந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘புதுமல ரணிய இன்றுவரின் அதுமன் எம் பரிசல் ஆவியர் கோவே’ (புறம் 147) இதனுள் மன் என்பது ஆம் என்பது குறித்து நின்றது. 1 ‘கூரிய தோர் வாள் மன்’ என்ற வழித் திட்பமின்று என்றானும், ‘வெட்டவல்லார் உளராயின்’ என்றானும் ஒழிந்த சொல்லினான் உணரும் பொருள் பட்டது. நச். இது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வனவற்றுள் ஒன்றன் பொருட்பாகுபாடு கூறுகின்றது. இ-ள் ; மன்னைச் சொல் கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம்மூன்று என்ப - மன்னைச் சொல் கழிவுப் பொருண்மையும் ஆக்கப் பொருண்மையும் எச்சமாய் ஒழிந்து நின்ற சொற்பொருண்மையும் என்று சொல்லப்பட்ட அம்மூன்று கூற்றையுடையது என்று கூறுவர் ஆசிரியர், எ-று. உ-ம் ; ‘சிறிய கட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம் 235) புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமன் எம்பரிசில் ஆவியர் கோவே’ (புறம் 147) ‘கூரியதார் வாள்மன், திட்பமின்று என வரும். சுல். என்-எனின், இது தத்தம் குறிப்பிற் பொருள் செய்குந வற்றுள் ஒன்றன் பொருட் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : கழிவுப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஆக்கப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஒழியிசைப் பொருண்மைக்கண் வரும் மன்னும் என மூன்று கூற்றதாம் என்ப மன்னென்னும் சொல்லது பொருட்பாகுபாட்டு வேற்றுமை எ-று. இவ்வாறு பொருளுணர்த்தலும் அவ்விடைச் சொற் காவ தோர் இலக்கணம் என்பது. அவ்வுதாரணம் உரையிற் கொள்ளப்படும்.
1. கூரியதோர் வாளாயிருந்தது இனித்திட்பமின்று: வெட்டவல்லார் உளராயின் இது கூரியதோர் வாளாகும் எனத் தனித்தனிப் பொருள் காண்க. |