இனிமுற்று : ‘ தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்’ என்பது, யாதுமூரே’ ‘நாளுமன்னான் புகழு மன்னை’ என்பனவும் முற்றும்மை. இனிஎண் : ‘நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் எனப் பூதம் ஐந்து’ என்பது. இனித்தெரிநிலை : ‘நன்றுமன்று தீதுமன்று’ என்பது, ‘இடைநிகர்த்தது’ என்றோர் பொருண்மை தெரிவித்து நிற்றலான் தெரிநிலை என்றாயிற்று. இனி ஆக்கம், ‘நெடியனும் வலியனும் ஆயினான்’ என்பது, இஃது எண் அன்றோ வெனின், ஒருபொருள் தன்னையே சொல்லுதலின் அன்றாயிற்றுப் போலும். மற்றும் இதனகத்து விகற்பமெல்லாம் அறிந்துகொள்க. பால. கருத்து :- உம்மை இடைச் சொல்லின் பொருட்குறிப்பு இவை என்கின்றது. பொருள் :- உம் என்னும் இடைச்சொல் (குறித்துவரும்) எச்சமும், (இழிவும் உயர்வும் குறித்து வரும்) சிறப்பும், ஐயமும், எதிர்மறையும், முழுமையும், எண்ணும், ஆய்வுநிலையும், ஆக்கமும் என்று சொல்லப்படும் அவ் எட்டுப் பொருட்கூறு பாட்டினையுடையதாம். எ.டு ; முறையே, சாத்தனும் வந்தான், இது முன்னர்க் கொற்றன் வந்தமையைக் குறித்து நிற்றலின் இறந்தது தழுவிய எச்ச உம்மை. யானைக்கும் அடிசறுக்கும், என்பது உயர்வு சிறப்பும்மை இவ்வூர் பூசையும் புலால்தின்னாது என்பது இழிவு சிறப்பும்மை ஒன்று இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந்தான் போல் நல்லார்கள் தோன்றும் அடக்கமுடையன். . . . . . . . . அன்னான் ஒருவன் (கலி - 47) இஃது இன்னான்எனத் துணியப்படாமையின் ஐயவும்மை. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் - (குறள் - 134) என்புழி மறத்தற்கூடாது எனப் பொருள் தந்து நிற்றலின் எதிர் மறையும்மையாம். மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - “கற்றிலனாயினும்கேட்க” எனவருவனவும் அது.
|