சிறப்பென்பது பொருளின் உயர்வு குறித்து நிற்கும். ‘கானக நாடனை நீயோ பெரும’ எனவரும். அஃதேல் எழுத்ததிகாரத்து ஓகார வீற்றுள் ஐயம் என்றும் ஓர் ஓகாரம் ஓதினாரால் எனின், அது தெரிநிலைக்கண் அடங்கும் என்பதூஉம் ஒன்று. வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால், 1 ஆண்டு மாறுகோள் எச்சமும் வினாவும் ஐயமும் என ஓதப்பட்டவற்றுள் (உயிர்ம. 88) 2வாராததுங்கொள்ளப்படும். ஒருவனோ ஒருத்தியோ தோன்றுகின்றார் எனவரும். நச். இதுவுமது. இ-ள் : பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசைதெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இரு மூன்று என்ப ஓகாரம்மே - பிரிநிலைப் பொருண்மை வினாப் பொருண்மை எதிர்மறைப் பொருண்மை எஞ்சிநின்ற சொற்பொருண்மை ஆராயும் நிலைமையையுடைய பொருண்மை என்கின்ற இவற்றை மிகுதிப் பொருண்மையோடே தொகுத்து ஓகாரப் பொருண்மை ஆறு என்று கூறுவர் ஆசிரியர், எ-று. உ-ம் : ‘யானோ தேறே னவர்பொய் வழங்கலரே’ (குறுந். 29) - இது தேறுவார் பிறரிற் பிரித்தலின் பிரிநிலை. சாத்தன் உண்டானோ?- இது வினா யானோ கொள்வேன்? - இஃது எதிர்மறை 3 கொளலோ கொண்டான் - இது, கொண்டு உய்யப்போக லாயினான் என்றலின் ஒழியிசை. ‘திருமகளோ அல்லள்; அரமகளோ அல்லள் : இவள் யார்?’ என்பது தெரிநிலை. ‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே’ (களவழி. 36) - இது மிகுதி உணர்த்தலின் சிறப்பு.
1. ஆண்டு உயிர் மயங்கியல் 88 ஆம் சூத்திரத்துள். 2. வாராதது - இச்சூத்திரத்தில் வாராதது ஐயம். 3. பிறர் ‘கொண்டுய்யப் போயினானல்லன்’ என்னும் ஒழிந்த பொருளைத் தருவதாகக் கூற, இவர் ‘கொண்டுய்யப் போகலாயினன்’ என்றதைத் தந்ததன் நோக்கம் எதிர்மறையாக இன்றி உடன்பாடாக முடிய வேண்டும் எனக் கருதியது ஆகலாம். எதிர்மறையாக முடிவதையும் உடன் படுவர் என்பதை எச்சவியல் 38 ஆம் சூத்திர உரையிற் காண்க. |