இ-ள் : வினை முதலாகப் பெயரீறாகச் சொல்லப்பட்ட ஆறு சொல்லினையும் குறித்த நிலைமைத்து என என்னும் சொல், எ-று. உ-ம் : கொள்ளெனக் கொடுத்தான் என்பது வினை குறித்து நின்றது. ‘பொள்ளென வாங்கே புறம் வேரார்’ என்பது விரைவு என்னும் குறிப்பு உணர நின்றது. ‘கல்லெனக் கவின் பெற்ற விழவற்றுப் படுத்தபின்’ (கலி. 5) என்பது இசைப் பொருண்மை குறித்து நின்றது. ‘கன்முகை யருவி தண்ணெனப் பருகி’ (புறம்.150) என்பது பண்பு குறித்து நின்றது. பாழெனக் காலெனப் பாகென ஒன்றென இரண்டென என்பது எண்ணுக் குறித்து நின்றது. ‘நாளென ஒன்றுபோற் காட்டி’ (குறள்) என்றவழிப் பெயர் குறித்து நின்றது. எழுத்ததிகாரத்துள் ‘என என் எச்சம்’ என ஓதுதலான் இவையெல்லாம் வினையெச்சப் பொருண்மையுணரவும் பெயரெச்சப் பொருண்மை யுணரவும் வரும் என்று கொள்க. 2 ஊரெனப்படுவது உறையூர் எனச் சிறப்புப் பற்றியும் வருமால் எனின், அது பெயர்ப் பொருளின் பாகுபாடாதலிற் பெயரென அடங்கும். நச். இது பொருள்படுமாறு கூறுகின்றது. இ-ள் : வினையே குறிப்பே இசையே பண்பே என்ணே பெயரொடு அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே என என் கிளவி-வினைச் சொல்லின் பொருண்மையும் குறிப்பாய் வரும் உரிச்சொல்லின் பொருண்மையும் இசைக்கண்வரும் உரிச் சொல்லின் பொருண்மையும் பண்பின்கண்வரும் உரிச்சொல்லின் பொருண்மையும் எண்ணுப் பொருண்மையும் பெயர்ப் பொருண்மையோடே கூடி அவ்வாறு பொருண்மையும்தான் இடைநின்று கருதிப் பின்வருஞ் சொல்லோடு இயைவிக்கும் நிலைமையை யுடைத்து என என்னும் சொல், எ-று.
2. ஊர் எனப்படுவது - ஊர் எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது. |