இவ்வோத்துகள் ஒன்றற்கொன்று இயைபுடைமை அவ்வவ் வோத்துக்களுட் கூறுதும். |
இனி, இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், கூறக்கருதிய பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. |
இதன் பொருள்:- கைக்கிளை முதலா - கைக்கிளையெனப்பட்ட ஒழுக்கம் முதலாக, பெருந்திணை இறுவாய் - பெருந்திணையென்னும் ஒழுக்கத்தினை இறுதியாகவுடைய ஏழனையும், முற்படக் கிளந்த எழுதிணை என்ப - முற்படக் கூறப்பட்ட அகத்திணை யேழென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
எனவே, பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுளவென்றவாறாயிற்று; எனவே, இப்பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தாராயிற்று. அகப்புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று முதலும் ஈறுங் கூறித் திணையேழெனவே, ‘நடுவணைந்திணை’ உளவாதல் பெறுதும். அவை மேற்கூறுப. |
கைக்கிளை யென்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை. இஃது ஏழாவதன் தொகை.1 எனவே, ஒருதலைக் காமமாயிற்று. எல்லாவற்றினும் பெரிதாகிய திணையாதலிற் பெருந்திணையாயிற்று. என்னை? எண் வகை மணத்தினுள்ளுங் கைக்கிளை முதல் ஆறு திணையும் நான்கு மணம் பெற, தானொன்றுமே நான்கு மணம் பெற்று நடத்தலின்.2 பெருந்திணையிறுவாய் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.3 |
முற்படக் கிளந்தவென எடுத்த லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த எழுதிணை யுளவாயிற்று. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டினை |
1. கைக்கண்கிளை - சிறுமைக்கண் தோன்றும் உறவு. 2. பெருந்திணைப் பெயர்க்காரணம் பொருந்தாது. இளம்பூரணர் கூறிய முதற்காரணமே பொருந்தும். 3. பெருந்திணையாகிய இறுவாயையுடைய ஒழுக்கங்கள் என விரிதலின் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகும். |