பக்கம் எண் :
தொடக்கம்
160தொல்காப்பியம் - உரைவளம்

தேன்  அழித்தலுங்    கிழங்கு  அகழ்தலுந்  தினை   முதலியன விளைத்தலுங்    கிளி    கடிதலும்;  யாழ்,
குறிஞ்சியாழ்   பிறவுமென்றதனால்,   பூ   காந்தளும்   வேங்கையுஞ்   சுனைக்குவளையும்;  நீர் அருவியுஞ்
சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும்.
  

மருதத்திற்கு   உணா,  செந்நெல்லும்    வெண்ணெல்லும்;  மா, எருமையும் நீர் நாயும்; மரம், வஞ்சியுங்
காஞ்சியும்   மருதமும்;   புள்,   தாராவும்  நீர்க்கோழியும்;  பறை, மணமுழவும் நெல்லரி கிணையும்; செய்தி,
நடுதலுங்  களைகட்டலும்  அரிதலுங்  கடாவிடுதலும்;  யாழ், மருதயாழ்,  பிறவுமென்றதனால், பூ, தாமரையுங்
கழு நீரும்; நீர், யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்களென்பனவேயாம்
  

நெய்தற்கு உணா,  மீன்விலையும்  உப்புவிலையும்; மா, உமண்பகடு போல்வன; முதலையுஞ் சுறாவும்
மீனாதலின்  மாவென்றல்  மரபன்று.  மரம்,  புன்னையும்  ஞாழலுங் கண்டலும்; புள், அன்னமும் அன்றிலும்
முதலியன;  பறை,  மீன்  கோட்பறை,  செய்தி,  மீன்படுத்தலும்  உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ்,
நெய்தல்யாழ்  பிறவு   மென்றதனால்,  பூ, கைதையும்  நெய்தலும்;  நீர்;  மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர்,
பட்டினமும் பாக்கமும்.
  

இனி   பாலைக்கு  உணா, ஆறலைத்தனவுஞ் சூறை கொண்டனவும்; மா, வலியழிந்த யானையும் புலியுஞ்
செந்நாயும்;   மரம்,   வற்றின   இருப்பையும்   ஓமையும்  உழிஞையும், ஞெமையும் புள், கழுகும் பருந்தும்
புறாவும்;  பறை,   சூறை  கோட்  பறையும்  நிரைகோட் பறையும்; செய்தி, ஆறலைத்தலுஞ் சூறைகோடலும்
யாழ், பாலையாழ்,  பிறவுமென்றதனால்,  பூ,  மராவுங்  குராவும்  பாதிரியும்; நீர், அறுநீர்க்கூவலுந் சுனையும்;
ஊர், பறந்தலை.
  

இன்னும்     பிறவு   மென்றதனானே  இக்கூறியவற்றிற்குரிய  மக்கள்  பெயருந்  தலைமக்கள் பெயருங்
கொள்க.   அவை   ‘பெயரும்  வினையும்’   (20)   என்னுஞ்  சூத்திரத்துட் காட்டுதும். பிறவுமென்றதனால்
கொள்வன சிறுபான்மை திரிவுபடுதலின் பிறவுமென்று அடக்கினார்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்