வாயினுங் கையினும்6 வகுத்த பக்கமொடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் - உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்திடத்துங் கூறுபடுத்துக்கூறிய நூல்களாற் பெறும் பெறும் பயனைக் கருதிய ஒரு கூற்றின்கண்ணும்; |
என்றது, வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு மென்றதாம். இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கொள்க. |
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்-போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறுத்தல் அரசியலன்றாதலிற் நமக்கேற்ற புகழும் பெருமையும்7 எடுத்துக்காட்டி இதனாற் பிரிதுமெனத் தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும். |
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. |
தூது இடையிட்ட வகையினானும் - இருபெருவேந்தர் பொருவது குறித்துழி இருவரையுஞ் சந்து செய்வித்தற் பொருட்டுக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற் பகுதிக் கண்ணும்; |
ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண்டுரைத்தலிற்8 தூதாயிற்று. வகையென்றார், வாணிகரில்9 அரசர்க்கும் அரசரில் அந்தணர்க்குந் தூது சிறந்ததென்றற்குங், குறுநிலமன்னர்க்குப் பெரும்பான்மை யென்றற்கும், வேந்தர் தம்மின் இழிந்தாருழைத் தூதுசேறல் உரித்தென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. |
ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும்-தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி உதவச் சேறற்கண்ணும். |
6 வாய் - வாய்மை, கை-ஒழுக்கம் வாயான் வகுத்த பக்கம் படைக்கலம் பயிறல் என்றும் கூறுவர் இளம்பூரணர் |
7 மானம்-குற்றம்என்பர் இளம்பூரணர். |
8 ஒரு வேந்தனிடத்து ஒருவேந்தன் சொன்னவற்றை உளங்கொண்டு சென்று கூறலின். |
9 வாணிகரில் - வாணிகரைக்காட்டிலும் |