உருபு நிற்குமிடம் இவை எனல்
 

105.

இறுதியும் இடையும் எல்லா உருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.
 

என் - எனின், உருபு நிற்குமிடம் கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) இருபொருளின்  இறுதிக்கண்ணும் அவ்  விருபொருளின்
இடையின்   கண்ணும்   அறுவகை   வேற்றுமையுருபு  வழக்கப்படும்
பொருளிடத்து நிலைபெறுதலை நீக்கார் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) கடந்தான்    நிலத்தை,      வந்தான்   சாத்தனொடு,
கொடுத்தான் சாத்தற்கு.   வலியன்   சாத்தனின்,  ஆடை  சாத்தனது, 
இருந்தான் குன்றத்துக்கண் : இவை இறுதிக்கண்வந்தன.

நிலத்தைக்     கடந்தான்,   சாத்தனொடு  வந்தான்,  சாத்தற்குக்
கொடுத்தான்,  சாத்தனின் வலியன், சாத்தனது ஆடை, குன்றத்துக்கண்
இருந்தான் : இவை இடையின் கண்வந்தன.

மற்று இது “பெயர்க்காகும்” (70) என்றவழி அடங்கிற்று பிற எனின்,
அஃது  ஒருகண் சொற்கண்ணுருபு நிற்குமாற்றிற்குச் சொல்லியது. இஃது
இருகண் உருபு நிற்குமாற்றிற்குச் சொல்லியதென உணர்க்.

அஃதேல்    அவ்வொருசொற்கணின்ற உருபினை அதன் முடிபாகி
வரும்  சொல்லொடுபடுத்து  நோக்க, இருசொற்கண் வந்ததாம் என்பது
சொல்லாமையும்   அமையவும்  பெறு  மன்றோ  எனின்,  அவ்வாறு
உய்த்துணர்வதனையே இனிது உணர்தற்பொருட்டாகயும், உருபுநோக்கி
வரும்சொல்   அவ்வுருபின்   முன்னில்லாது   பின்னிற்றல்   மயக்க
நீர்மைத்து எனற் பொருட்டாகவும் ஈண்டுக் கூறினார் என உணர்க.

“வரையார்” எனவே வழுவுடைத்து என்பது போந்தது.

“நெறிபடுபொருள்”    என்றதனால், இவ்வாறு இடையும் இறுதியும்
உருபுநிற்பது,  உருபேற்று  வழங்கும்  பெயர்க்கண்ணே  ;  வழங்காத
பெயர்க்கண் நில்லா என்பது.

(எ - டு.) அவவ்ழிக்கொண்டான்      என்பது,    அவ்வழிக்கட்
கொண்டான்  எனவும், கொண்டான் அவ்வழிக்கண் எனவும் அவ்வாறு
வழங்குவாரின்மை      இல்லாதாயிற்று.       வழங்குவாருண்மையின்
அவ்விடமென்னும்   பெயர்க்கண்   அவ்விடத்துக்கண்   கொண்டான்
எனவும்,  கொண்டான்  அவ்விடத்துப்பொருள்  எனவும்  நின்றதென
உணர்க.

மற்றிஃது, 1”எவ்வயிற் பெயரும்” என்புழி அடங்கிற்றன்றோ எனின்,
இதுவும் அவ்விருசொற்கண் வருமாற்றிற்குக் கூறினார் என்பது.   (20)


1. வேற்றுமையியல் 7ஆம் நூற்பா.

******************************************************************