ஆறனுருபிலக்கணமும், எல்லாவுருபிற்கும்
பொதுவிலக்கணமும்,

 

106.

பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபடி வழங்கிய வழிமருங் கென்ப.
 

என் -  எனின்,    விசேடவகையான்    உருபிற்கு    உரியதோர்
இலக்கணமும்,  எல்லா  உருபிற்கும்  பொதுவாயதோர்  இலக்கணமும்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஓர்   உருபு  ஓருருபினை   ஏற்று  நிற்றலும்  எல்லா
உருபுகளும் தொக்கு வருதலும் இவை இரண்டு முறைமைப்பட வியலும்
வழக்கின்கண்ணேயுள என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) பிறிது  பிறி  தேற்றற்கு  உதாரணம்  :  சாத்தனதனை,
சாத்தனதனொடு என ஏழாவதன்காறும் ஒட்டுக. சாத்தனது அது எனத்
தன்னுருபு   தன்னை   ஏலாது   பிறிது  பிறிதேற்கும்  என  ஏற்பது
ஆறாவதென   ..........அதனையொழிய  ஏற்குமென்பதூஉம்  பெறுமாறு
என்னை  எனின்  முன்னர்  உருபேற்பது பெயரென்று கூறினமையின்
பிறிதென எய்துப அல்லாதென்பது பெற்றாம்.

அஃதேயெனின்                              பிறசொற்களும்
பிறிதெனப்படுமால்...............கோடலென்பதனான்   இது   வயிற்றென்பது
பிறிதேற்றலெனவே தன்னையேலாதென்பது பெற்றாம்.

இனி    “ஒன்றின முடித்தல்” என்பதனால் சாத்தனது நன்று எனப்
பயனிலைகோடலும்  சாத்தன்............விளியேற்றலும்  உடைத்து என்பது
கொள்ளப்படும்.

உருபு தொக்குவருவதற்கு உதாரணம் : நிலங்கடந்தான், தாய்மூவர்,
கருப்புவேலி, விரைவீழருவி, சாத்தன் ஆடை, குன்றக்கூகை எனவரும்.

இவ்வுருபுகள் தொகுமிடத்து உருபும் பொருளும்  உடன்தொகலும்,
ஒருவழி உருபே தொகலும் என இருவகைய.

அவ் ஆறு உருபினுள்ளும் ஆறாவது உருபே தொகுவது, அல்லன
எல்லாம்  இவ்வாறு  தொகும்  எனக்  கொள்க.  படைக்கை  என்பது
உருபும்  பொருளும்  உடன் தொக்கது. நிலங்கடந்தான் என்பது உருபு
தொக்கது. பிறவும் அன்ன.

இதனால்  சொல்லியது உருபு தன்னிலக்கணமாறிப் பெயரிலக்கணம்
எய்துதலும், தன்பொருள்வழித் தான் இல்லாதாகலும், வழுவே எனினும்
முற்கொண்டமைந்த  வழக்காதலான்  களையலாவன அல்ல என மரபு
வழுவமைதி கூறியவாறு.                                  (21)

******************************************************************