என் - எனின் உயர்திணைச் சொல்லாமாறுணர்த்தி, இனி அஃறிணைச் சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒன்றினை யறியுஞ் சொல்லாவது த ற டக்க ளென்கிற வொற்றுக்களை யூர்ந்துவருகிற குற்றியலுகரமாகிய வெழுத்தினை யீறாகவுடைய சொற்கள், (எ - று.) (எ - டு) உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரியது, செய்யது எனவரும். இவை தகரமூர்ந்துவந்த குற்றியலுகர ஈற்றவாம். கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று எனவரும் : இவை றகரமூர்ந்துவந்த குற்றியலுகர ஈற்றவாம். குண்டுகட்டு, கொடுந்தாட்டு எனவரும். இவை டகரமூர்ந்துவந்த குற்றியலுகர ஈற்றவாம். மற்று ட த ற என்று எழுத்துக் கிடக்கைமுறையாற் கூறாதது என்னை எனின் , தகரம் மூன்றுகாலமும், வினைக்குறிப்புங் கோடலான் முன்வைக்கப்பட்டது. றகரம் இறந்தகாலமென்றும், வினைக்குறிப்புங் கோடலான் அதன்பின் வைக்கப்பட்டது. டகரம் வினைக்குறிப்பல்லது கோடலின்மையின் அதன்பின் வைக்கப்பட்டது. உகரத் திறுதி - உகரமாகியவிறுதி யெனப் பண்புத்தொகை. அத்து: அல்வழிச்சந்தி. உகரவீற்றுச்சொல்லிற்கு உகர விறுதி யென்பது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை குற்றியலுகரம் என்பது மெலிந்து நின்றது. (8) |