என் - எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ - ள்.) அ என ஈறு திரிந்து நிற்றல், அஃறிணை இடத்துக்கு என்னும் உருபும், ஐ என்னும் உருபும் நில்லாமையுடைய, (எ - று.) எனவே உயர்திணையிடத்து மூன்றுருபும் திரியும் என்பதூஉம், அஃறிணைக்கண் ஆன் என்னும் உருபு ஒன்றுமே திரியும் என்பதூஉம் பெற்றாம். (எ - டு.) “கடிநிலை யின்றே யாசிரி யர்க்க” ஆசிரியர்க்கு எனற்பாலது ஆசிரியர்க்க என்றாயிற்று. “காவலோனக் களிறஞ்சும்மே” - காவலோனை எனற்பாலது காவலோன என்றாயிற்று. புலவரான் என்பது புலவரான என்றாயிற்று. இவை உயர்திணைக்கண் திரிந்தவாறு. புள்ளினான் என்பது புள்ளினான என்றாயிற்று. இஃது அஃறிணைக்கண் திரிந்தவாறு. அவ்வொடும் என்ற உம்மை எதிர்மறையாகலான் ஈறு திரியாமல் நிற்றல் பெரும்பான்மை. இவை இடைச்சொல்லாதலின் 1 ‘தம்மீறு திரிதல்’ என்புழி அடங்காதோ எனின், வழக்கினுள் இவ்வாறு வாராமையின் அடங்கா என்பது. (26)
1. இடையியல் 3 ஆம் நூற்பா. |