ஆண்மை சுட்டிய பெயர்
 
  

184.

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே,
 

என் - எனின்,  ஆண்மைப்பெயர்    எல்லாவற்றையும்  தொகுத்துத்
திணைக்குரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.) ஆண்மையைக் கருதின பெயர்களெல்லாம் அஃறிணையுள்
ஆண்  ஒன்றற்கும்  உயர்திணையுள்  ஒருவற்கும்  நிற்றல்  பொருந்தின,
(எ - று.)
  

அவை   ஆண்மை  இயற்பெயர் எனவும், ஆண்மைச் சினைப்பெயர்
எனவும்,    ஆண்மைச்    சினைமுதற்   பெயர்   எனவும்,  ஆண்மை
முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும்.
  

(எ - டு.)  ஆண்மையியற்பெயர் -  சாத்தன்  வந்தது,   சாத்தன்
வந்தான் என வரும்.
  

ஆண்மைச் சினைப்பெயர் -  முடவன்  வந்தது, முடவன் வந்தான்
என வரும்.
  

ஆண்மைச்  சினைமுதற்  பெயர்   -   முடக்கொற்றன்   வந்தது,
முடக்கொற்றன் வந்தான் எனவரும்.
  

ஆண்மை  முறைப்பெயர்  -  தந்தை  வந்தது,  தந்தை  வந்தான்
எனவரும். நுந்தை யென்பதும் அது.
  

எந்தை என்பது தன்மை யடுத்தமையின் உயர்திணைப் பெயராம்.   (27)

******************************************************************