பன்மை சுட்டிய பெயர்
 

185.

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும்
என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே.

 

என் - எனின்,   பன்மைப்    பெயரெல்லாவற்றையும்   தொகுத்துத்
திணைக்கு உரியவாமாறு உணர்த்தல் நுதலிற்று.
  

(இ - ள்.)   பன்மையைக்    கருதிய     எல்லாப்    பெயர்களும்
அஃறிணைக்கண்  ஒன்றும்   பலவும்,   உயர்திணைக்கண்  ஆண்பாலும்
பெண்பாலும்  என்று  சொல்லப்படும்  நான்கு  பாற்கும்  ஒரு தன்மைய,
(எ - று.)
  

பன்மை   சுட்டிய   பெயர்   பன்மை   இயற்பெயரும்,   பன்மைச்
சினைப்பெயரும்,  பன்மைச்  சினைமுதற்பெயரும்  என  மூன்று  என்று
உணரப்படும்.
  

ஈண்டுப்   பன்மை   என்றது  இருதிணைப் பன்மையும்  அன்று  ;
பலபால் மேலும் வருதலின் பன்மை என்றாராகக் கொள்க.
  

(எ - டு.)பன்மை  யியற்பெயர் - யானை வந்தது, யானை வந்தன,
யானை வந்தான், யானை வந்தாள் எனவரும்.
  

பன்மைச்  சினைப்பெயர்  - நெடுங்  கழுத்தல்  வந்தது,  வந்தன,
வந்தான், வந்தாள் என வரும்.
  

பன்மைச் சினைமுதற்  பெயர்   -  பெருங்கால்  யானை  வந்தது,
வந்தன, வந்தாள் எனவரும்.
  

ஈண்டு  ஒன்றே  என்றதனை அஃறிணை ஆண் ஒன்றினையும் பெண்
ஒன்றினையுமாகக்   கொள்க.   பன்மைக்கும்   அஃதொக்கும்.  உயிரில்
ஒன்றும்    பலவும்   கொள்ளற்க.  ஒருவர்  என்பதனை   உயர்திணை
இருபால் மேலும் கொள்க.                                  (28)

******************************************************************