என் - எனின், இதுவும் படர்க்கைக்கு உரியது ஓர் ஈறும் அதன் முடிபு வேற்றுமையும் கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) மார் என்னும் சொல்லை ஈறாகவுடைய சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது தான் பிற முற்றுச் சொற்போற் பெயரொடு. முடியாது காலத்தை உணர்த்தும் சொல்லாகிய வினைச் சொல்லோடு முடியும். அவ்வாறு முடிந்ததாயினும் முற்றாம் இயல்பில் திரிபின்று என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.) மார் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். (இ - ள்.) ‘ஆர்த்தார் கொண்மார் வந்தார்’ என வரும். உண்மார் தின்மார் என நிகழ்காலம் உண்டேலும் அறிக. இதுவும் வினையெச்ச முற்றாய் அடங்காதோ எனின், மேற்கூறியவாறே கூறுக. உண்ணன்மார் என எதிர்காலம் உண்டேலும் அறிக. இனி ‘நிலவன்மாரோ புரவலர்’1 என்றும், ‘ பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே’ 2 என்றும், ‘நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே’3 என்றும், பெயர் கொண்டு முடிந்தனவால் எனின் அவை நிலவுக, பாடுக, காண்க எனவரும் வியங்கோளிற்கு எதிர்மறை. இதன் மறை அல்ல என்று போகலும் ஒன்று. வினை கொள்ளும் என்பது பெரும்பான்மை. சிறுபான்மை பெயர் வரும் என்பதும் ஒன்று. இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க. (10)
1. புறம். 375 2. புறம்.375. 3. நற்றிணை 64. |