என் - எனில், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ - ள்.) முன்னிலை தன்மை என்று சொல்லப்பட்ட அவ் விரண்டிடத்தொடு நிலைபெறாதாகும், ஏவற்பொருண்மையை உணர்த்துஞ்சொல், (எ - று.) (எ - டு.) அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க என வரும். தன்மை முன்னிலை என்னாது முன்னிலை தன்மை என்றாதனாற் சிறு பான்மை முன்னிலைத் தன்மைக் கண்ணும் வருமெனக்கொள்க. (எ - டு.) “கடாவுக பாக நின் கால்வல் நெடுந்தேர்”, யான் செல்க காட்டிற்கு என வரும். மற்று, இவ்வியங்கோள் ஏவல்கண்ணியதும் ஏவல் கண்ணாததும் என இருவகைத்து. ஏவல்கண்ணியதாவது உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்க என விதித்தல். ஏவல் கண்ணாததாவது இழிந்தான் உயர்ந்தானை இன்னது செய்யப்பெற வேண்டிக்கோடல். மற்று அது பெரும்பான்மையும் “உணர்க” எனறாற்போலக் ககரங் கிடைத்து வருமே எனினும், வாழியர் என அர் ஈறாயும், வாழிய என யகரவீறாயும். “இயற்கைப்பொருளை யிற்றெனக் கிளத்தல்” (சொல்-19) என அல் ஈறாயும், “மறைக்குங் காலை மரீஇய தொரால்” (சொல்-443) என ஆல் ஈறாயும், “காணன்மார் எமர்” என மாரீறாயும், ‘அஞ்சாமை யஞ்சுவதொன்றின்’ என ஐகார வீறாயும் வரும். இவற்றுள் அஞ்சாமை என்பது தொழிற்பெயர். மறையன்றோ எனின் தொழிற்பெயர் மறையும் உண்டெனினும் அஞ்சுவென்.......................தொழிற்பெயர் வாய்பாடும் ஒருவழி வியங்கோளாமாகலின் மறையும் அந்நிகர்த்ததாம் என்பது. மற்று உண்ணற்க, உண்ணேற்க, உண்ணாற்க என்பவோ எனின் அவை அப்பத்திடை வேறுபாடல்லது முன்கூறிய ககரவீற்றவாகல் ஒக்கும். (28) |