செய்யும் என்னும் சொல் பொருந்தாத இடம்
 

229. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா.
 

என் - எனின், இதற்கும் அக்கருத்தொக்கும்.

(இ - ள்.) பலரது படர்க்கையும் முன்னிலையும்  தன்மையும்  ஆகிய
அவ்வயின் என்று சொல்லப்பட்ட மூன்றும்  நிகழ்  காலத்தைத்  தமக்குக்
காலமாக   உடைய   செய்யும்   என்னும்  சொல்லோடு
  வருவனவாகக்
கொள்ளப்படா என்றவாறு. எனவே  படர்க்கையிற் பல்லோர்  படர்க்கை
ஒழித்து ஒழிந்த நான்கு படர்க்கைக் கண்ணும் வரும் என்பதாம்.

(எ - டு.)   அவன்  உண்ணும்,  அவள்  உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும் என வரும். அஃதேல்,

“ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
யாஅதும் என்னு மவர்”

எனவும்,

“என்    குறை சொல்ல வேண்டுமா லலவ” எனவும், “யான் போகல்
வேண்டும்”  எனவும்  ஒழிந்த  இடத்தும்   வந்ததால்  எனின், வாராது;
அவற்றிற்  கெல்லாம் சொன்னிலை வேறாகப்  பொருள்  உரைக்கப்படும்
என்பது.

நிகழும் காலம்  என்றது  என்னை?  அவன்  உண்ணும்  என எதிர்
காலத்தும் வருமால் எனின், அது கால மயக்கம் எனக் கொள்க.

நிகழ்    கால வரவு இக்காலத்து இல்லையால் எனின் உண்டு. அவன்
என்  செய்யும்   என்றார்க்கு்   அவன்  இப்பொழுது  ஓதும்   என்றார்
போல்வன நிகழ்காலத்தது எனக் கொள்க.

செய்யும் என்னும்  சொல்தான்  முற்றும் எச்சமும்என  இருவகைத்து,
அவற்றுள்   முற்று  விலக்கியது   ஈண்டை  விலக்கு  எனக்  கொள்க.
முற்றிற்கும் என்பதோர் ஈறாகக் கொள்க.

இதனோடு   முன்கூறிய முற்று ஈறெல்லாம் தொகுத்து  நோக்க, உயர்
திணை  ஈறு  இருபத்து நான்கும், அஃறிணை  ஈறு ஏழும்.  இனி விரவு,
வினை யெச்சமும் பெயரெச்சமும் முற்றும் என மூவகைத்து.

அவற்றுள்  மூன்று ஈறாகிய  முன்னிலையும், வியங்கோளும், இன்மை
செப்பலும், வேறென் கிளவியும்,  செய்ம்மனவும்  ஆகிய  ஐந்துனுள்ளும்
முன்னிலை  ஈறு முப்பத்து  மூன்றும்  வியங்கோள் ஈறு ஏழும், இன்மை
செப்பல்   ஈறு  இரண்டும்,  வேறு  என்    கிளவியது   ஈறு ஒன்றும்,
செய்ம்மன என்பதன் ஈறு ஒன்றும் ஆக  நாற்பத்து  நாலாம்; பிறவுமாம்.
மேலும் அறிக.                                            (29)

******************************************************************