என் - எனின், இதுவும் அம் மூன்றன் திறத்துப்படுவதோர் முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அம் மூன்று சொல்லும் சினைப்பொருளிடத்து வினையெச்சமாய்த் தோன்றின் முன் கூறின விதிக்கேற்பச் சினை வினையான் முடியாது அச்சினையையுடைய முதல் வினையோடு ஒன்றாய் முடியினும், பிறவாற்றான் முடியினும் முன் கூறிய வினையோடு ஒன்றாதற்றன்மையை உடைய என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.) (எ - டு.) கையிற்று வீழ்ந்தான், கையிறூஉ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் எனவரும். மற்றிது கையிற வீழ்ந்தான் எனச் செயவென்னெச்சத்திரிபாகற் பாற்றெனின், அவ்வாறாவது இறுதற்றொழில் கையதும் வீழ்தற்றொழில் முதலதுமாயின் அன்றே; இறுதலும், வீழ்தலும் கையதாகக் கூறுகின்றதாயின் அதனுள் அடங்காது என்பது. அதன் பொருள் கையிற்று வீழ்ந்தவாறாகக் கொள்க. காலழுகி வீழ்ந்தான் என்பதும் அது. கையிற்றான், காலழுகினான் என்பன ஈண்டைக்கு உதாரணமாமோ எனின் அவை வினையெச்சமன்மையிற் “கண்ணுந் தோளும் முலையும் பிறவும்” (சொல்-62) என்று ஆண்டைக்கே உதாரணமாமெனக் கொள்க. மற்று, கையிற்று வீழ்ந்தான், காலழுகி வீழ்ந்தான் என்பனவும் ஆண்டைத் திணை வழுவமைதிக்கு உதாரணமாதலின் ஈண்டைக் கூறவேண்டா எனின்; திணைவழுவுக்கு அன்று ஈண்டுக் கூறுகின்றது; அதற்கு விதி கண்ணுந்தோளும் என்பதே; ஈண்டு மேல் தன்வினையான் முடியும் என்று கூறியன ஒருவழித் தன்னோடு தொடர்ந்த பிறவினையானும் முடியும் என்பதாயிற்று. “சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய” என்பதனால் இதுவுமோர் மரபு வழுவமைதி எனக் கொள்க. குரங்கு கையிற்று வீழ்ந்ததென இம் முடிபு அஃறிணை வினைக்குங் கொள்க. ஈண்டுச் சினை வினை முதல்வினையொடு முடியும் என்பதே சொல்லிய தெனின், சாத்தனது கையிற்று வீழ்ந்தது என வினைமுடிபுள்ள வழியும் சாத்தனது கையிற்று வீழ்ந்தான் எனவுமாம் பிறவெனின், ஆகாது. அம்முதல் தானும் எழுவாயாகியவழியது இம்முடிபெனக் கொள்க. (33) |