வினையெச்சங்கள் அடுக்கியபோது முடியுமாறு
 

235. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியா தடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.
 

என் -  எனின்,  இவ்வெச்சங்களுள்  எடுத்தடுக்கியவழிப் படுவதோர்
முறைமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  பலவாற்றனும்    வினையெச்சமாகிய   சொற்கள்   ஒரு
சொல்லொடு  ஒரு சொல்லாய் முறை முடியாதே  பலவாயடுக்கி  வரினும்,
முன்னின்ற  எச்சம்  முடியவே அல்லாதனவும்  பொருள் முடிந்தனவாம்,
(எ - று.)

(எ - டு.) உழுது  உண்டு  தின்று  ஓடிப்பாடி  வந்தான்  எனவரும்
உண்ணூஉ தின்னூஉ ஓடூஉப் பாடூஉ வந்தான்  எனப்  பிற  எச்சங்களும்
அடுக்கி வருவன கொள்க.

‘பன்முறையானும்’  என்றதனான்  ஓரினத்து  எச்சமே  அன்றி,  பல
வினத்து எச்சங்களும் மயங்கி அடுக்குதலும் கொள்க.

(எ - டு.) உழுதுகிழுதுண்பான், ஓடூஉ, பாடூஉ வந்தான் என்பன.

இனிச்  சொன் முறை  முடியாது  அடுக்கிவரினும்  என்று சொற்கண்
முறை  முடித்தடுக்கலும்  உண்டு  என்பது  போதரக்  கூறிய  அதனான்
சொற்கண்  முறை  முடித்தடுக்கி வரினும்  முன்னது  முடியயே  முடியும்;
முடியாக்கால் முடிந்தனவும் முடிந்திலவாம் என்பது கொள்க.

(எ - டு.)  உழுது  வந்தான்  கிழுதுவந்தான்,  ஓடி  வந்தான்  பாடி
வந்தான் என நின்றவழி முடியாதவாறு அறிந்துகொள்க.

ஒன்றென  முடித்தல்  என்பதனால்  பெயரெச்சம்  அடுக்கிய வழியும்
முன்னது முடிய முடியும் என்பது கொள்க.

(எ - டு.) “நெல்லரியும்   இருந்தொழுவர்”    (புறம்-24)   என்னும்
புறப்பாட்டினுள்   பாயுந்து  எனவும்,  தூங்குந்து   எனவும்,   தரூஉந்து
எனவும்,    பாயும்   எனவும்,   கெழீஇய    எனவும்,    அடுக்கிநின்ற
பெயரெச்சம்  எல்லாம் ‘மிழலை’ என்னும்  பெயர்கொண்டு  முடிந்ததாம்
என்று உணர்க.                                       (35)

******************************************************************