என் - எனின், வினைச்சொல் எல்லாவற்றானும் விரைவுப்பொருட்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒருபடியாக வருகின்ற வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மையை இறந்த காலமாகக் கருதிக் கூறுதல் விரைவுப் பொருண்மை உடைய என்று சொல்லுவர் புலவர், (எ - று.) (எ - டு.) ஒருவனை ஒருவன் ஓர் குறைபொருட்டால் இன்னும் உண்டிலையோ போதாயோ என்புழி, உண்பேன், போதுவேன் எனற்பாலதனை, உண்டேன் போந்தேன் என்னும். இனி உண்கின்றானைக் கேட்பினும் உண்ணாநின்றேன் போதுவல் என்னாது உண்டேன், போந்தேன் என்னும். இவை அமைதற்குக் காரணம் செய்யாததனைச் செய்தாக்கித் தன் விரைவு தோன்றக் கூறும் கருத்தினன் ஆதலின் என்பது. இதுவும் சொல்லொடு சொன்மயக்கம். இஃது எல்லாச்சொன்மேலும் கொள்க. (43)
1. ‘மலர்மிசை ஏகினான்’ என்னும் திருக்குறளில் இந் நூற்பாவினை இலக்கணமாக எடுத்துக்காட்டுவர் பரிமேலழகர். |