என் - எனின், வினைச்சொல் எல்லாவற்றினும் நன்மையானும் தீமையானும் மிக்கதோர் பொருட்கண் ஒருவன் செய்தி கூறுமிடத்து எதிர்காலம் இறந்த காலத்தொடும் நிகழ்காலத்தொடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உலகத்து ஒருவழி நன்மையானும் ஒருவழித் தீமையானும் தவஞ்செய்தல், தாய்க்கொலை என்பன மிக்க தொழிலிடத்துவரும் தவஞ்செய்வான், தாயைக் கொல்வான் என்னும் வினைப்பெயர்ச்சொல்லால் ஒருவன் தன்னை வேறுகூறுதலைக் குறித்த வினைப்பெயர்க்கு முடிபாக அம்மிக்க வினைப்பயனாகிய சுவர்க்கம் புகுதலும், நிரயம் புகுதலும் என்னும் பண்பினை மேல் வரும் சுவர்க்கம் புகுவண், நிரயம் புகுவன் என்னும் சொற்களால் தன்னைச் சொல்லுதலையும் குறித்த அவ்வினை முதலாகிய பொருள் தான் மிக அத்தொழிலினைச் செய்யா திருந்த நிலைமைக்கண்ணே அத்தொழிலைச் செய்யத் தன்பயனை உறுகின்றானைக் கண்டான் போல ஒருவன் தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் எனச் சொல்ல நிகழ்காலத்தின்கண்ணே உண்மை பெறத் தோன்றும் பொருண்மையினை யுடைத்தாம், (எ - று.) (எ - டு.) தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என முன் கண்ணழிவுள் வந்தனவே எனக்கொள்க. இதனாற் சொல்லியது இவ்வினை செய்வான் மேல் இவ்வினை எய்தும் என்னும் பொருண்மை. இவ்வினை செய்து, பின்னை இவ்வினை செய்கின்றான் எனக் காலம் மயங்கவரும் என்பது கூறக் கருதினான் கூறிவாறாக்கி இதற்கேற்பச் சொன்னிலை யறிந்து பகுத்துக் கொள்க. ஒன்றென முடித்தல் என்பதனால் அறஞ் செய்தான் சுவர்க்கம்புக்கான் என இரண்டுவினையும் இறந்தகாலத்தாற் கூறுதலும், அறஞ் செய்யாநிற்கும் அவன் சுவர்க்கம் புகுவான் என நிகழ்காலம் ஒன்றனையும் மயங்கக்கூறுதலும் மற்றுள்ளதுங்கொள்க. ‘நிகழ்காலத்து மெய்பெறத் தோன்றும்’ என்றதனால் சுவர்க்கம் புகுவான் என்னாது சுவர்க்கம் புகும் என்பதன்றி அறஞ்செய்வான் என்பதனை அறஞ்செய்தான் எனக்கூறுதல் சூத்திரத்துப் பெற்றிலமால் எனின், அது முன்னின்ற சூத்திரத்துள் அப்பொருளினைக் கூறும் இலக்கண வாய்பாடு இது என நிறுத்தின அதிகாரவாற்றலாற் பெறவைத்தார் போலும். மற்றும், முன் இவ்வினை செய்வான் இவ்வினை செய்யும் என்பது படச் செய்த தில்லாமை தோன்றக் கூறிவைத்துப் பின்னையும் செய்வதில் வழி என்றது என்னை எனின், அங்ஙனம் செய்வானாய் முன்னின்றவன் பின்னையதனைச் செய்தவழிக் கூறுதலும் ஒன்றுடாதலின் அதுநீக்கிய கூறினார் போலும். அதுவும் சொல்லொடு சொன்மயக்கம். (44) |