இடைச் சொற்களின் பாகுபாடு
 

252.

அவைதாம்,
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசை நிலைக் கிளவி யாகி வருநவும்
இசை நிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியால் பொருள்செய் குநவுமென்(று)

அப்பண் பினவே நுவலுங் காலை.
 

என்   -    எனின்,   அவ்விடைச்   சொற்களின்   பாகுபாடாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  மேல் இடைச்சொல்  என்று  சொல்லப்பட்டவை   தாம்
இருமொழி   தம்மிற்   புணர்தலியன்ற     நிலைமைக்கண்   அவற்றின்
பொருணிலைமைக்குதவிசெய்து    வருவனவும்,      வினைச்சொற்களை
முடிக்குமிடத்துக்  காலங்காட்டும்  இடைச்சொற்களொடு    கூடித்  தாம்
பால்காட்டுஞ்    சொற்களாய்    வருவனவும்,      வேறுபாடு   செயத்
பொருண்மையிடத்து    வேற்றுமையுருபாய்   வருவனவும், வழக்கின்கண்
தமக்கு  ஓர்  பொருளின்றித்  தாம்    அடைந்த  பெயர்  வினைகளை
அசையப்பண்ணி   நிற்கும்   நிலைமையவாய்    வருவனவும்,   பெயர்
பொருளிடத்துப்    பொருளின்றி    ஓரோர்    அசையை   நிறைத்தற்
பொருண்மையவாய்  வருவனவும்,  பெயர்   வினைகள்போல  விளங்கப்
பொருளுணர்த்தாத  சொற்கள்  தத்தம்  குறிப்பானே   ஒரு  பொருளை
உணர்த்தி  வருவனவும்,  ஒத்த  என்னும்  வாய்பாடு தன்கண்  நில்லாத
கூற்றானே  நின்ற ஒப்புமைப் பொருண்மையை   உணர்த்தி வருவனவும்
என்று    சொல்லப்பட்ட     அவ்விலக்கணங்களை    உடையனவாம்,
அவற்றைச் சொல்லுங்காலத்து, (எ - று.)

புணர்ச்சிக்கண்   வருவன    எழுத்தோத்தினுள்    ‘இன்னேவற்றே’
யென்னும் சூத்திரத்தான் ஓதப்பட்டன.

இனித்  தன்னினமுடித்தல்  என்பதனான் காரம், கரம், கான் என்னும்
எழுத்துச் சாரியையுங் கொள்ளப்படும்.

வினைச்சொற்கள்  பால்காட்டி  வருவன  வினையியலுள், ‘அம் ஆம்
முதலாக’ஈறுபத்தி ஓதினவெல்லாம் எனக் கொள்க.

இனி  அவ்வினைச்  சொற்கள்  ‘காலமொடு  வருநவும்’ என்றதனால்
காலங்காட்டி   வருவன  உண்டான்  என்புழி  இடைக்கண்   டகரமும்,
உண்ணாநின்றான் என்புழி  ஆ நின்றும், உண்பான்  என்புழிப் பகரமும்
அத்  தன்மைய  பிறவும்  எனக்கொள்க.  காலம்  உணர்த்தி வருதலான்
அவை   காலம்  எனப்பட்டன.  உண்டான்  என்புழிக்   காலங்காட்டும்
டகரத்துடனே பால் காட்டும் ஆன் வந்தவாறு அறிக.

இவ்வாறு  பாலும்  காலமும்   காட்டுவன   வினைக்கென்றோதினும்
அதனைப்     பெரும்பான்மையாக்கி    உண்டவன்    என்றாற்போலப்
பெயர்க்குங் கொள்க.

இனி     ஒன்றென    முடித்தல்   என்பதனால்  வினைச்சொற்கண்
பாலுணர்த்துவனவேயன்றிப்    பெயர்க்கே     உரிய    வாய்பாட்டால்
உணர்த்துவனவுங்   கொள்ளப்படும்.  அவை   நம்பி,  நங்கை என்னும்
இகர ஐகார ஈறுபோல்வன எனக்கொள்க.

வேற்றுமை   யுருபாய் வருவன வேற்றுமை யோத்தினுள் ‘அவைதாம்
பெயர்  ஐ ஒடு கு’ என்னும் சூத்திரத்துப்  பெயர்  ஒழிந்த ஏழும் எனக்
கொள்க.  இவற்றை  ஓத்து  அடைவுபற்றி  முன் கூறாதது, வினைக்கண்
வருவன பெரும்பான்மையாகல் பற்றிப் போலும்.

மற்றை அசைநிலையும், இசைநிறையும், குறிப்பிற் பொருள்செய்குநவும்
இவ்வோத்தினுள்     தத்தம்     சிறப்புச்  சூத்திரத்துள்ளே உதாரணங்
காட்டப்படும்.

ஒப்பில்  வழியாற்   பொருள்  செய்குநவற்றிற்கு  உதாரணம்  இதன்
பின்னதிகாரத்து உவமையியலுள் காணப்படும்.

இச்சூத்திரத்து      முன்னைய     மூன்றும்     முன்னர்    ஓதிப்
போந்தனவாகலாள்      முன்      வைக்கப்பட்டன.      பின்னையது
பின்னதிகராத்துக்    கூறலால்    பின்    வைக்கப்பட்டது.   இடையன
இவ்வோத்தினுள் கூறப்படுதலான் இடைநின்றன.

ஆயின்     இடைக்கணின்ற  மூன்றனுள்ளும் பொருள்  செய்வதனை
முன்  சொல்லாது  அசைநிலை  இசைநிறைகளை  முன்    சொல்லியது
என்னை  எனின், இவை இரண்டும் ஒழிய  ஈற்றின் முன்னும்   பின்னும்
நின்றவையெல்லாம்  பெரும்பான்மையினவாய்   நிற்றலானும், அவைதாம்
இவையாய்     நிற்றலானும்,    இவைதாம்     அவையாய்     நிற்றல்
சிறுபான்மையாகலானும் என்பது.                               (2)

******************************************************************