என் - எனின், இதுவும் அது. (இ - ள்.) எச்சத்தின்கணண்தும், சிறப்பின்கண்ணதும், ஐயத்தின்கண்ணதும், எதிர்மறைக்கண்ணதும், முற்றின் கண்ணதும், எண்ணின்கண்ணதும், தெரிநிலைக்கண்ணதும், ஆக்கத்தின் கண்ணதும் என அக்கூறு எட்டாம் ‘உம்’ என்னுஞ்சொல்,(எ - று.) எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும் என இருவகைத்து. அவையாவன:- யான் கருவூர்க்குச் செல்வேன் என்றாற்கு யானும் அவ்வூர்க்குப் போதுவல் என்பதும், அவ்வாறு கூறினார்க்கு யானும் உறையூர்க்குப் போதுவன் என்பதூஉம் என இவை. இனிச்சிறப்பு - உயர்வுச் சிறப்பும், இழிவுச்சிறப்பும் என இரு வகைத்து. உயர்வு - தேவர்க்கும் வேம்பு கைக்கும் என்பது; ஊர்க்கும் அணித்தே பொய்கை என்பதும் அது. இழிபு - அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது எனவரும். ஐயம் - பத்தும் எட்டும் உள என்பது. எதிர்மறை - கொற்றன் வருதற்கும் உரியன் என்பது. இவ்வெதிர்மறை “அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே” எனப் பண்பு பற்றியும் வரும். எச்சத்தோடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அது பிறிதோர் பொருளினைத் தழுவும், இஃது அப்பொருட்டானும் ஒரு கூற்றைத் தழுவும் என்பது. இனிமுற்று - தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என்பது. யாது மூரே, நாளுமன்னான், புகழுமன்னை என்பனவும் முற்றும்மை. இனி எண் - நிலனு நீருந் தீயும் வளியும் ஆகாயமுமெனப் பூதமைந்து என்பது. இனித் தெரிநிலை - நன்றுமன்று தீது மன்று, என்பது “இடை நிகர்த்தது” என்றோர் பொருண்மை தெரிவித்து நிற்றலால் தெரிநிலை என்றாயிற்று. இனி ஆக்கம் - நெடியனும் வலியனுமாயினான் என்பது. இஃது எண்ணன்றோவெனின், ஒருபொருடன்னையே சொல்லுதலின் அன்றாயிற்றுப் போலும். மற்றும் இதனகத்து விகற்பமெல்லாம் அறிந்து கொள்க. (7) |