என் - எனின் மேற் பல சொல்லான் வரும் ஒரு பொருளுணர்த்தினான்: இனி ஒரு சொல்லான் வரும் பல பொருளுணர்த்துவான் அவற்றது பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வினையினான் வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும், வினையினான் வேறுபடாத பலபொருள் ஒரு சொல்லும் என இருவகைய பலபொருள் ஒருசொல், (எ - று.) (எ - டு.) மா, வாள், கோல், கன்று, தளிர், பூ, காய், பழம் என்னும் தொடக்கத்தன. இவற்றுள் மா என்பதே பலசாதியு முணர்த்திப் பொதுவாய் நின்றது. அல்லன எல்லாம் ஒரு சாதியை உணர நிற்றலின் பொதுமையிலவால் எனின், அவ்வாறு பொதுமைப் படாதாயினும் விகற்பித்து நோக்கத் தம்முள்ளே சாதி மாறுபாடுடைய என உணர்க. இவற்றான் உலகத்துப் பெயர்கள் எல்லாம் ஒரு பொருளோடும், ஓரிடத்தோடும், ஒரு காலத்தோடும், பண்போடும், தொழிலோடும், உறுப்போடும் படுத்துநோக்கப் பலபொருள் ஒருசொல் எனப்படும் போலும். (52) |