என்-எனின், ‘காலமும் உலகமும்’ என்பதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) காலமும் உலகமும் என்னுந் தொடக்கத்தன உயர்திணைமுடிபு பெறுதலும் உடைய; அவ்வோதிய வாய்பாடு ஒழிய வேறு வாய்பாடாயின விடத்து, (எ - று.) (எ - டு.) காலம் என்பது மகரவீறு; காலன் என்னும் னகரவீறாய் நின்றுழிக் காலன் கொண்டான் என முடியும். உலகத்தோர் பசித்தார், உயிர்க்கிழவன் போயினான் என்பனவும் அவை. இதனாற் சொல்லியது மேல் ‘நின்றாங்கிசைத்தல் இவணியல் பின்று என்ற விலக்கு, இவண் எனக் காலமும் உலகமும் என்னும் வாய்பாட்டினையே நோக்கி விலக்காது, அப்பொருண்மேல் வரும் வாய்பாடுகளெல்லாம் விலக்குவதுபோலும் நோக்கப்பட நின்றது என்று கொள்ளினுங் கொள்ளற்க, என்று அவை வேறிடத்தாயின் இசைக்கும் எனவுங் கூறவேண்டிக் கூறினார் என்பது. (60)
1 “வகுத்தான் வகுத்த வகையல்லால்” என்ற திருக்குறளில் இந்நூற்பாவினை மேற்கோளாக எடுத்தாளுவர் பரிமேலழகர். |