சூ. 100 :மெல்லெழுத் தாறும் பிறப்பின் ஆக்கம்

சொல்லிய பள்ளி நிலையின வாயினும்

மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்
(18)
 

க-து:

மெல்லெழுத்துக்கட்கு வளியிசை இது என்கின்றது.
 

பொருள்:ஙஞணநமன என்னும் மெல்லெழுத்துக்கள் ஆறும் அவற்றின்
கிளை   எழுத்துக்களாகிய  வல்லெழுத்துக்களொடு  சேர்த்துச்   சொல்லிய
வினைக்கள   முயற்சியான்   வடிவுற்று   நிலைபெற்றனவாயினும்   அவை
வெளிப்படுங்கால் மூக்கு வளியிசையினது கட்டுக் கோப்பினான்  இசைக்கும்.
யாப்புற என்றது அதன் திரிபின்மையை உணர்த்திநின்றது.
 

இதனான்   இவற்றின்    கிளையாகிய    வல்லெழுத்துக்கள்   நெஞ்சு
வளியானிசைக்கும் என்பது புலப்படும். விளக்கம் மேற்கூறப்பட்டது.
 

மேலும்,  இதனான்   ‘‘மெய்’’  என்பது  எழுத்து  வடிவு  கொள்ளும்
நிலையினைச் சுட்டி நிற்கும் என்பதும்,  வளியிசை  உயிர்ப்பினால்  அவை
ஒலி   (புள்ளி)   பெற்றுவரும்  என்பதும்  தெளியலாம்.  பிறவிளக்கங்கள்
மேற்கூறப்பெற்றன.