சூ. 109 | அவைதாம் |
| மெய்பிறி தாதல் மிகுதல் குன்றல்என்று |
| இவ்வென மொழிப திரியு மாறே |
(7) |
க-து: | புணர்மொழிக்கண் நிகழும் திரிபுகள் இவை என்கின்றது. |
பொருள்:நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியுமாகிய புணர்மொழிகள்தாம் திரியும் முறைமையாவது, பிறப்பிடத் தடுமாற்றத்தான் வடிவு வேறுபடுதலும் ஒலிமிகுதலும் ஒலிகுன்றலும் ஆகிய இவைஎன்று கூறுவர் ஆசிரியர். |
நிறுத்தசொல்லும் குறித்துவருகிளவியும் அதிகாரப்பட்டு நிற்றலின் அவைதாம் என்றார். இத்திரிபுகள் அவ்இருமொழிக் கண்ணும் ஏற்றபெற்றி நிகழுமாதலின். ‘என்று’ என்பது எண்ணின்கண்வந்தது. |
‘மெய்’ என்றது உறுப்புக்களான் உறும் வடிவத்தை. ‘பிறிதாதல்’ என்றது வடிவமாற்றத்தால் எய்தும் எழுத்தொலியை. ‘மிகுதல்’ என்பது அவ்எழுத்தொலி தனக்குரிய மாத்திரையினும் ஓங்கி நிற்றலை. ‘குன்றல்’ என்பது தனக்குரிய மாத்திரையை இழந்து நிற்றலை. |
வரிவடிவின்கண், மெய் பிறிதாதலை அங்ஙனம் பிறிதாய எழுத்தின் வடிவத்தை எழுதியும், மிகுதலை அவ்எழுத்தையே உடன் வரைந்தும், குன்றலை அவ்எழுத்தை எழுதாது நீக்கியும் உணர்த்தல் வேண்டும். |
ஒருமொழிக்கு உறுப்பாகி நிற்கும் எழுத்துள் ஒன்று நீங்கின் அம்மொழிப்பொருள் சிதையுமாகலின் கெடுதல் என்னாது ‘‘குன்றல்’’ என்றார். இவை மூன்றும் திரிபு. எனவே இவையல்லாதது இயல்பெனத்தானே போதருதலின் இயல்பாவதிது, எனமிகைபடக் கூறாராயினர். |
எ-டு : பொற்குடம் -மெய்பிறிதாதல்; கிளிப்பிள்ளை -மிகுதல்; அறநெறி - குன்றல்; பொன்மலை - இயல்பு. இவை பெயரும் பெயருமாய்ப் புணர்ந்தன. ஆட்கொண்டான், உலாப்போந்தான், மரநட்டான், கண்பெற்றான், இவை பெயரும் தொழிலுமாய்ப் புணர்ந்தன. அராஅப்பாம்பு - பழுஉப்பல் என உயிர்மிக்கது. (இவை அளபெடையல்ல) ‘‘திரிபிடன்’’ என்றதனான் ஒரு புணர்ச்சிக்கண் இத்திரிபு ஒன்றேயன்றி இரண்டும் சிறுபான்மை மூன்றும் ஒருங்கு வருமென அறிக. எ-டு: சாக்குத்தினான் - குன்றலும் மிகுதலும் ஒருங்குவந்தன. பனங்காய் - குன்றல் மிகுதல் மெய்பிறிதாதல் மூன்றும் வந்தன. |