சூ. 112 :

வேற்றுமை குறித்த பொருள்மொழி நிலையும்

வேற்றுமை அல்வழிப் பொருள்மொழி நிலையும்

எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்

ஒழுக்கல் வலிய புணருங் காலை

(10)
 
க-து:

மேற்கூறிய   பெயரும்   தொழிலுமாகிய  சொற்கள் புணருங்கால்
வேற்றுமைப் பொருள்படவும், அல்வழிப்பொருள்படவும்  புணரும்
என்றும்;    ஆண்டு   எழுத்தும்   சாரியையும்  வரும் என்றும்
கூறுகின்றது.
 

பொருள்: மேற்கூறிய  சொற்கள்  வேற்றுமைப் பொருள் நிலைகுறித்த
சொற்களும்,   வேற்றுமை   வழியல்லாத   (அல்வழிப்)    பொருள்நிலை
குறித்த சொற்களுமாய்ப்   புணரும். அங்ஙனம்   அவை    இருவழியாகிப்
புணருமிடத்து   அவை   எழுத்தும்    சாரியையும்   பெறுதலாகிய  அவ்
இருபண்பினொடு நடத்தலை வலிமையாக உடையனவாகும்.
 

மெய்பிறிதாதல்    முதலிய  திரிபுகள்    நிறுத்தசொல்லும்    குறித்து
வருகிளவியுமாகிய      சொற்களின்கண்      உறுப்பாகவே      நிற்கும்.
அவ்வாறன்றி   எழுத்தும்   சாரியையுமாகிய    இவை     வேற்றுமையும்
அல்வழியுமாகிய    பொருள்   புலப்பாட்டிற்குத்   துணையாகவும்  உருபு
முதலாயவற்றை  ஏற்கத்  துணையாகவும்  வருமாதலின் ‘‘ஒழுக்கல் வலிய’’
என்றார்.    எழுத்து     என்றது,     சாரியை     மொழிகளைப்போலப்
பொருள்வேறுபாட்டினைச்  செய்யாமல்  புணர்ச்சிக்குத் துணைபுரியுமளவில்
நிற்கும். அது பொருள் வேறுபாடு செய்யின் சாரியையாகுமென்க.
 

எ-டு:‘‘ஞகாரை   ஒற்றிய    தொழிற்பெயர் முன்னர்...உகரம் வருதல்
ஆவயி  னான’’  ‘‘நகர   இறுதியும்   அதனோ  ரற்றே’’  ‘‘வேற்றுமைக்கு
உக்கெட அகரம் நிலையும்’’ இவை எழுத்துப் பெறுதற்குரிய இலக்கணம்.
 

‘‘ஓகார இறுதிக்கு  ஒன்னே  சாரியை’’,  ‘‘ஞநவென் புள்ளிக்கு இன்னே
சாரியை’’,   ‘‘உயர்திணை   யாயின்   நம்மிடை    வருமே’’,   ‘‘திங்கள்
முன்வரின்    இக்கே   சாரியை’’  இவை மொழிபெறுதற்குரிய இலக்கணம்.
‘‘உயிரும் புள்ளியும் இறுதி யாகி....ஒத்த தென்ப ஏஎன்  சாரியை’’. இது தனி
எழுத்தாயினும் பொருள் வேறுபாடு செய்தலின் சாரியை என்ப.
 

சொற்கள் புணருங்கால் அவற்றின் பொருள்நிலை  இரண்டு என்பதனை
இச்சூத்திரத்தாற் பெறப்பட வைத்தார். இது “நுதலியறிதல்’’ என்னும்  உத்தி.
வேற்றுமைப் பொருளாவது: ஒரு பெயர்ப்பொருள் வேறுபடுதலைக்  காட்டும்
குறியீடாகிய உருபிடைச் சொற்கள் மறைந்து  தம்பொருளைப்  புலப்படுத்தி
நிற்றல். எனவே சொல்நோக்கத்தான் ஈண்டு வேற்றுமை என்பது வேற்றுமை
உணர்த்தும்   உருபுகளைச்   சுட்டி   நின்றது.   இதனை   ‘‘வேற்றுமைப்
பொருள்வயின் உருபா குநவும்’’ என்பார் ஆசிரியர்.
 

உருபுகள்   வெளிப்பட்டு   நின்று  புணரின்  அஃது உருபு  புணர்ச்சி
என்றும், வெளிப்படாது மறைந்து தம்பொருளைத்   தந்து   நிற்பின்  அது
வேற்றுமைப்   (பொருட்)    புணர்ச்சி    என்றும்    கூறுவர்.  இதனான்
வேற்றுமைப்   புணர்ச்சி     சொல்லமைப்பான்    இருவகைப்   படுதலை
அறியலாம். பெயர்ப்பொருள் எய்தும் வேற்றுமை    எட்டனுள்  தமக்கென
உருபுடையனவாய்ப்   பெயர்ப்பொருளை  வேறுபடுத்துவன ஆறேயாகலின்
எழுத்தியலுள் வேற்றுமைப் புணர்ச்சி என்பது   அவ்ஆறனையே  குறிக்கும்
என்பதை வருஞ்சூத்திரத்தான் ஓதுப.
 

இனி,    இச்சூத்திரத்து     முதலிரண்டடியினும்     உள்ள ‘‘பொருள்
மொழிநிலையும்’’   என்னும்    பாடம்      எவ்வகையாலோ   பிறழ்ந்து
‘‘புணர்மொழிநிலையும்’’    எனவுளது.   அதனைப் பிழையெனக் கருதாமல்
உரையாசிரியன்மார்   குழம்பித்    தடுமாறி   இயைபற்ற   விளக்கங்களை
இயம்பிச் சென்றனர்.
 

ஆசிரியர்    அமைத்த  பாடம் ‘‘பொருள் மொழிநிலை’’ என்பதேயாம்.
இதனை: ‘‘ணகார இறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும்  வேற்றுமைப்
பொருட்கே’’ (புள்ளி.7)   ‘‘யகர   இறுதி   வேற்றுமைப்    பொருள்வயின்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே’’(புள்ளி.62) ‘‘லனஎன வரூஉம்
புள்ளி யிறுதிமுன்.... வேற்றுமை  குறித்த  பொருள்வயி னான’’ (குற்றிய-75)
‘‘அச்சக் கிளவிக்  கைந்தும்  இரண்டும்  எச்ச மிலவே பொருள்வயி னான’’
(வேற்.மய.17) எனப் பின்னர் எடுத்தாளுதலான் அறிக.
 

அல்வழிப்  பொருளாவது:   அறுவகை   வேற்றுமைப்  பொருள்நிலை
யல்லாத  பிறவெல்லாம்  என்க.  அல்வழி  என்பது வேற்றுமையல்லாதவழி
என்னும்  பொருளது.   இஃது   அஃறிணை  என்பது போல்வதொரு மரபு.
அவையாவன:  எழுவாய்த்தொடர்,  விளித்தொடர்,   வினைமுற்றுத்தொடர்,
இருவகை எச்சங்களின் புணர்ச்சி, இடைச்சொற்றொடர், உரிச் சொற்றொடர்,
வேற்றுமைத்    தொகை    மொழியல்லாத   பிற   தொகை   மொழிகள்,
அடுக்குத்தொடர் முதலியனவும் பிறவுமாம்.
 

எழுத்தே   என்னும்   ஏகாரம் எண்ணுப் பொருளது. ‘‘ஒழுகல் வலிய’’
என்பது எதுகை நோக்கிச் செய்யுள்   விகாரமாய்   ஒழுக்கல்  வலிய  என
நின்றது. பிறவினைப் பொருள்பட நின்றது எனினும் அமையும்.
 

எ-டு :பண்ணுப்பெயர்த்து, - பொருநக் கடுமை - இவை வேற்றுமைப்
புணர்ச்சியுள்  எழுத்துப்பெற்றன. உரிஞுக்கடிது,  பொருநுக்கடிது -  இவை
அல்வழிப்    புணர்ச்சியுள்   எழுத்துப்     பெற்றன.      மகவின்கை -
வேற்றுமைப்புணர்ச்சியுள்    சாரியை  பெற்றது. பனையின் குறை (பனையும்
குறையும்) அல்வழியுள் சாரியை பெற்றது.