சூ. 230 :

வல்லெழுத்து மிகினும் மான மில்லை 

(28)
 
க - து:

மேலனவற்றிற்குப்           புறனடை           கூறுகின்றது.
 

பொருள்: மேற்கூறிய   மரப்பெயர்     மூன்றற்கும்    வல்லெழுத்து
மிக்குவரினும் குற்றமில்லை.
 

எ. டு : யாஅக்கோடு;    பிடாஅக்கோடு;  தளாஅக்கோடு,    செதிள்,
தோல், பூ எனவரும்.   இழிவுசிறப்பும்மையான்   வலிமிகுதல்  சிறுபான்மை
எனக் கொள்க.
 

இனி, யாஅத்துக்கோடு,   பிடாஅத்துக்கோடு,   தளாஅத்துக்கோடு என
அத்துப் பெறுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர்.  உருபிற்கு  ஓதிய
சாரியைகள் ஒல்லும் வழியெல்லாம் பொருட்கும்  வரும் என்பது  ஆசிரியர்
கருத்தாகலின்,   அஆ   என்னும்   மரப்   பெயர்க்  கிளவிக்கு (சூ. 182)
என்பதனான்   அத்துச்சாரியை    வருதல்    அமையுமாகலின்    ஈண்டு
மிகைப்படுத்து   அடக்க   வேண்டாமையறிக.   மேல்  வருவனவற்றிற்கும்
இவ்விளக்கம் ஒக்கும்.